பட்டா மாறுதலுக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: கையும், களவுமாக சிக்கினார் வி.ஏ.ஓ.

3

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியில் பட்டா மாறுதலுக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கையும் களவுமாக போலீசாரிடம் பிடிபட்டார்.



இதுபற்றிய விவரம் வருமாறு;


தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் பிரபு, 40. இவர் பாலக்கோடு அடுத்த மாரண்டஅள்ளி நகரில் வி.ஏ.ஓ வாக பணியாற்றி வந்தார்.


அதே பகுதியை சேர்ந்த கணேசன் என்பவர், விவசாய நிலத்திற்கு பட்டா மாறுதல் கேட்டு விண்ணப்பித்திருந்தார். பட்டா மாற்றம் செய்ய 5 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக வி.ஏ.ஓ., கேட்டுள்ளார். முதல்கட்டமாக 3 ஆயிரம் ரூபாய் கொடுத்த நிலையில் மேலும் 2 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் தான் பட்டா மாற்றம் செய்ய முடியும் என பிரபு கூறி விட்டார்.


வேதனையடைந்த கணேசன் மேலும் பணம் தர விருப்பமில்லாமல் தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை கணேசனிடம் கொடுத்து அனுப்பினர்.


பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் வி.ஏ.ஓ., பிரபு லஞ்சப்பணத்தை வாங்கும்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. நாகராஜன், இன்ஸ்பெக்டர் பெருமாள் ஆகியோர் அவரை கையும் களவுமாக பிடித்தனர். அவர் மீது லஞ்ச வழக்கு பதிவு செய்து தர்மபுரி சிறையில் அடைத்தனர்.


பணியின் போது மது போதையில் இருந்ததால் கடந்த 6 மாதத்திற்கு முன்பு சஸ்பெண்ட் செய்யப்பட்ட பிரபு, மீண்டும் பணியில் சேர்ந்த நிலையில் தற்போது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement