வால்பாறை எம்.எல்.ஏ., காலமானார்!

7

கோவை: வால்பாறை தொகுதி எம்.எல்.ஏ., அமுல் கந்தசாமி, 60, இன்று காலமானார்.


கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்தவர் அமுல் கந்தசாமி, 60. வால்பாறை தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ஆகவும்,எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில துணை செயலாளராகவும் பணியாற்றி வந்தார்.

புற்று நோய் காரணமாக, அமுல் கந்தசாமி கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக இன்று காலை தகவல் வெளியானது. அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகள் பலரும் நேரில் சென்று அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதை கேட்டறிந்தனர்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அமுல் கந்தசாமி உயிரிழந்தார்.

மறைந்த அமுல் கந்தசாமிக்கு, கலைச்செல்வி என்ற மனைவியும், சுப நிதி என்ற மகளும் உள்ளனர். மகள் கோவை தனியார் கலை அறிவியல் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

சிறு வயது முதலே அதிமுகவில் பணியாற்றிய அமுல் கந்தசாமி, ஒரு முறை மாவட்ட ஊராட்சி துணைத் தலைவராகவும், ஒருமுறை மாவட்ட கவுன்சிலர் ஆகவும் பணியாற்றி உள்ளார். கடந்த 2021ல் வால்பாறை தொகுதி எம்.எல்.ஏ., ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இ.பி.எஸ். இரங்கல்;

கழகத்தின் மீதும், கழகத் தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு பணியாற்றி வந்த அமுல் கந்தசாமி, நல்ல முறையில் மக்கள் பணியாற்றிவர்.

அமுல் கந்தசாமியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், இந்தத் துயரத்தைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு இரங்கல் தெரிவித்துள்ளார்.


தமிழக கவர்னர் ரவி, முதல்வர் ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் அமுல் கந்தசாமி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தகனம்

மறைந்த வால்பாறை எம்.எல்.ஏ.,வின் உடல், இன்று அன்னுார் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி மற்றும் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

Advertisement