பிரேசிலில் விபத்தில் சிக்கியது வெப்பக் காற்று பலூன்; 8 பேர் பரிதாப பலி: 13 பேர் படுகாயம்

2

பிரேசிலியா: பிரேசிலின் கிராண்டேயில், வெப்பக் காற்று பலூன் விபத்தில் சிக்கி தீப்பிடித்ததில், 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



பிரேசிலின் தெற்கு மாநிலமான சாண்டா கேடரினாவில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தலமான கிராண்டேயில், 21 பயணிகளை ஏற்றிச் சென்ற வெப்பக் காற்று பலூன் விபத்தில் சிக்கியது. இதையடுத்து வெப்பக் காற்று பலூன் தீப்பிடித்து எரிந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.


இந்த விபத்தில், 8 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 13 பேர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.


இந்த விபத்து குறித்து, சாண்டா கேடரினா கவர்னர் ஜோர்ஜினோ மெல்லோ சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: வெப்பக் காற்று பலூன் விபத்தில் சிக்கி, 8 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும்.


நாங்கள் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, சாவோ பாலோ இடத்தில், நடந்த வெப்பக் காற்று பலூன் விபத்தில், ஒரு பெண் உயிரிழந்தார். மேலும் 11 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement