மேட்டூர் அணை நீர்வரத்து 22,469 கன அடியாக உயர்வு

மேட்டூர், கர்நாடகாவில் சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் கபினி அணையில் பாதுகாப்பு கருதி கடந்த, 17 முதல், வினாடிக்கு, 25,000 கனஅடி நீர் காவிரியில் திறக்கப்பட்டது.
தற்போது மழை குறைய, நேற்று கபினி நீர்வரத்து வினாடிக்கு, 13,024 கனஅடியாக சரிந்தது. அதற்கேற்ப நீர்திறப்பு வினாடிக்கு, 12,000 கனஅடியாக குறைக்கப்பட்டது.

அதேபோல், கே.ஆர்.எஸ்., அணைக்கு, 19ல் வினாடிக்கு, 37,946 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று, 18,387 கன அடியாக சரிந்தது. அணையில் இருந்து, 1,343 கனஅடி நீர் திறக்கப்பட்டது.

இந்நிலையில் கபினியில் திறந்த நீர் வந்ததால், நேற்று முன்தினம் காலை, 8,218 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து, இரவு, 16,341 கன அடி, நேற்று காலை, 18,220 கன அடி, மாலை, 22,469 கன அடியாக அதிகரித்தது. டெல்டா பாசனத்துக்கு, 16,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. திறப்பை விட வரத்து கூடுதலாக உள்ளதால், நேற்று முன்தினம், 113.57 அடியாக இருந்த அணை நீர்மட்டம், நேற்று காலை, 113.69 அடியாகவும், மாலை, 113.81 அடியாகவும் உயர்ந்தது.

Advertisement