'ஏழடி' போர்வெல்; கோவையில் நடந்த பெருங்கூத்து!

கோவை : கோவை அருகே செட்டிபாளையம் பேரூராட்சியில், ஏழடிக்கு ஒரு போர்வெல் போடப்பட்டு, மும்முனை மின்சாரம் பெறுவதற்கு, ஒயரிங் வேலை செய்து மின் கம்பத்தில் பெட்டி அமைத்திருந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இம்முறைகேடு வெட்ட வெளிச்சமானதும், அதை மாவட்ட நிர்வாகம் மூடி மறைக்கப் பார்க்கிறது.
கோவை மாவட்டம், செட்டிபாளையம் பேரூராட்சி இரண்டாவது வார்டில் ஓராட்டு குப்பையில் பூசாரி தோட்டம் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள உத்திரண்டாயர் கோவிலுக்குச் சொந்தமான, 24 ஏக்கர் நிலத்தில், கிரசர் உரிமையாளர்கள் சங்கம் சார்பில், 5,000 மரக்கன்று நட திட்டமிட்டு, அதற்கான பணி நடந்து வருகிறது. இதற்காக, இரு இடங்களில் போர்வெல் போடப்பட்டன. மின் இணைப்பு இல்லாததால், மரக்கன்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டது.
போலி கட்டமைப்பு
மின் வாரியத்தை ஏமாற்றி, மும்முனை இணைப்பு பெறுவதற்காக, 18ம் தேதி, இந்நிலத்துக்கு அருகே சாலையை ஒட்டி, போர்வெல் போட்டிருப்பது போல் போலியாக ஒரு கட்டமைப்பு ஏற்படுத்தி, 'ஒயரிங்' செய்யப்பட்டு, மின் கம்பத்தில் 'பியூஸ் கேரியர்' பெட்டி அமைக்கப்பட்டிருக்கிறது. போர்வெல் போட்டதற்கு அடையாளமாக, குழாயை சுற்றிலும் 'எம் சாண்ட்' கொட்டப்பட்டிருந்தது.
இதில், ஏதோ தவறு நடந்திருப்பதாக தகவல் கசிந்ததால், அப்பகுதிக்கு நேரில் சென்ற, அப்பேரூராட்சி இரண்டாவது வார்டு கவுன்சிலர் (பா.ஜ.,) மதிவாணன், போர்வெல் குழாயை திறந்து பார்த்தார். டேப் வாயிலாக அளவீடு செய்தபோது, போர்வெல் ஆழம் ஏழடியே இருந்ததால், அதிர்ச்சி அடைந்தார்.
போர்வெல் போல் ஜோடனை
அவ்விடத்தின் உச்சியில் மின் ஒயர்கள் செல்வதால், போர்வெல் இயந்திரம் நிறுத்தியிருக்க வாய்ப்பில்லை. குழியை தோண்டி, குழாய் பதித்து, சுற்றிலும் 'எம் சாண்ட்' கொட்டி, போர்வெல் போட்டதுபோல் ஜோடனை செய்திருந்தது தெரியவந்தது.
பொக்லைன் இயந்திரம் வாயிலாக குழி தோண்டி, குழாய் பதித்ததாக, அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறினர். இவற்றை வீடியோ எடுத்த கவுன்சிலர், சமூக வலைதளத்தில் பதிவேற்றினார். கோவை மாவட்ட நிர்வாகத்துக்கு நெருக்கடி ஏற்பட்டதும், பேரூராட்சி அலுவலர்கள், அவ்விடத்துக்குச் சென்று, குழாயை அப்புறப்படுத்தி, குழிக்குள் மண்ணை கொட்டி, மூடியுள்ளனர். மின் கம்பத்தில் பொருத்தியிருந்த பெட்டியையும் அகற்றினர்.
பேரூராட்சி விளக்கம்
இச்சூழலில், என்ன நடந்தது என பேரூராட்சி சார்பில், மாவட்ட நிர்வாகம் தரப்பில் விளக்க அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. இவ்விவகாரத்தில், போர்வெல் போட்டது போல் போலியாக தோற்றம் ஏற்படுத்தியதே தவறு. இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது மாவட்ட நிர்வாகத்தின் கடமை.
தவறு செய்தவர்கள் மீது தயவு தாட்சண்யம் காட்டாமல், துறை ரீதியான நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல், இம்முறைகேட்டுக்கு மாவட்ட நிர்வாகமும் உடந்தையாக இருப்பதுபோல், மூடி மறைக்க முயற்சித்திருப்பது, விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
கள்ளக்கணக்கு எத்தனையோ!
மாவட்டம் முழுவதும் இதுபோல், எத்தனை இடங்களில் போர்வெல் போட்டதாக கணக்கெழுதி, பணம் சுருட்டப்பட்டதோ என்கிற சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இவ்விஷயத்தில், தங்களுக்குள் சமரசம் ஏற்படுத்திக் கொள்ளாமல், உயரதிகாரிகள் கள ஆய்வு செய்து, உண்மையை கண்டறிந்து, துறை ரீதியான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மாவட்ட நிர்வாகம் நேர்மையாக செயல்படுகிறது என்பதாக இருக்கும். இல்லையெனில், இம்முறைகேட்டுக்கு மாவட்ட நிர்வாகமும் உடந்தை என்றுதான் மக்கள் நினைப்பார்கள்.
பேரூராட்சி தலைவர் ரங்கசாமியிடம் கேட்டதற்கு, ''கோவில் நிலத்தை பூசாரிகள் குடும்பத்தார் அனுபவித்து வந்தனர். அந்நிலம் மீட்கப்பட்டு, ஹிந்து சமய அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. கிரஷர் உரிமையாளர்கள் சங்கம் சார்பில், மரக்கன்றுகள் நடப்படுகின்றன. அதற்கு தண்ணீர் விடுவதற்கு, மின் இணைப்புக்காக முயற்சி எடுக்கப்பட்டது. காழ்ப்புணர்ச்சியால், தவறான செய்தியாக்கி விட்டனர்,'' என்றார்.பேரூராட்சி செயல் அலுவலர் பவித்ரா கூறுகையில், ''மின் இணைப்பு பெறுவதற்காக செய்யப்பட்ட பணி, தவறாகி விட்டது. மரக்கன்றுகள் பட்டுப்போகாமல் இருக்க, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது,'' என்றார்.கிரஷர் உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் சின்னசாமி கூறுகையில், ''சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்காக மரக்கன்றுகள் நடப்படுகின்றன. இதில் என்ன பிரச்னை? இரு போர்வெல் போடப்பட்டுள்ளன. மின் இணைப்பு உள்ளதா என தெரியவில்லை்,'' என்றார்.கவுன்சிலர் மதிவாணன் கூறுகையில், ''விஸ்வநாதன் என்பவர், தனது தோப்புக்கு எதிரே, பொக்லைன் இயந்திர வாகனம் வாயிலாக, போர்வெல் போட்டுள்ளதாக தெரிவித்தார். நான் பார்த்தபோது, ஏழடி ஆழமே இருந்தது. வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டேன். தனக்கு தெரியாமல் நடந்ததாக செயல் அலுவலர் கூறுகிறார்,'' என்றார்.
பேரூராட்சி செயல் அலுவலர் சார்பில், மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், 'செட்டிபாளையம் பேரூராட்சியில் பல்லடம் மெயின் ரோட்டில் ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில், தமிழ்நாடு கிரஷர் அசோசியேட்ஸ் வாயிலாக, கலெக்டரின் அறிவுரைப்படி, 5,000 மரக்கன்று நடும் பணி நடந்து வருகிறது. ஏற்கனவே இரண்டு போர்வெல்கள் போடப்பட்டுள்ளன. கூடுதலாக ஒரு போர்வெல் அமைக்க உத்தேசித்து, தமிழ்நாடு கிரஷர் அசோசியேட்ஸ் வாயிலாக உத்தேசிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஏற்கனவே அமைத்த போர்வெல்களில் உள்ள நீர் போதுமானதாக உள்ளதால், கூடுதலாக போர்வெல் அமைக்கவில்லை. பேரூராட்சி சார்பாக போர்வெல் அமைக்க, எந்த செலவினமும் செய்யவில்லை' என கூறப்பட்டிருக்கிறது.









மேலும்
-
திருவாலங்காடு தேர் மண்டபத்திற்கு பலகை அமைக்கும் பணி மும்முரம்
-
நெரிசலில் சிக்கிய கலெக்டர் இனியாவது தீர்வு கிடைக்குமா?
-
சாலை மைய தடுப்புச்சுவர் மீண்டும் அமைக்கப்படுமா?
-
'பீக் ஹவர்சில்' சாம்பல், நிலக்கரி லாரிக்கு தடை விதிக்க கிராமவாசிகள் கோரிக்கை
-
அதிகாரிகள் முன்னின்று சீரமைத்த கட்டடம் பராமரிப்பு இன்றி பாழ்
-
ஒவ்வொரு கல்வியாண்டிலும் 6,000 மாணவர்கள்... ஏமாற்றம்; இரண்டே அரசு கல்லுாரிகள் இருப்பதால் அதிருப்தி