வர்ணம் பூசப்படாத வேக தடைகளால் புத்தகரத்தில் விபத்து அபாயம்

காஞ்சிபுரம்:புத்தகரத்தில், வேகத்தடைகள் மீது வர்ணம் பூசப்படாததால், வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழும் நிலை உள்ளது.

காஞ்சிபுரம் அடுத்த, ஏனாத்துார் - மருதம் - தென்னேரி கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலை உள்ளது. மருதம் கூட்டுச்சாலையில் இருந்து, புத்தகரம் கிராமம் வழியாக, ஊத்துக்காடு கிராமத்திற்கு செல்லும் சாலை செல்கிறது.

இச்சாலை முதல்வர் சாலைகள் மேம்பாடு திட்டத்தில், சமீபத்தில் தார் சாலையாக போடப்பட்டது. குறிப்பாக, புத்தகரம் ஏரிக்கரை முதல், மருதம் கூட்டு சாலை வரையில் இருந்த தார் சாலையை அகற்றிவிட்டு, புதிய தார் சாலை போட்டனர்.

இதில், புத்தகரம் நடுநிலைப் பள்ளி அருகே வேகத்தடைகள் அமைக்கப்பட்டன. அதன் மீது, வெள்ளை நிற வர்ணம் அடிக்கவில்லை. மேலும், எச்சரிக்கை சாதனங்களும் அமைக்கவில்லை.

இதனால், அந்த சாலை வழியாக செல்வோர், வேகத்தடை அருகே நிலை தடுமாறி கவிழும் அபாயம் உள்ளது.

எனவே, புத்தகரம் நடுநிலைப் பள்ளி அருகே அமைக்கப்பட்ட வேகத்தடைகள் மீது வெள்ளை நிற வர்ணம் அடிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement