காற்றில் பேனர் சரிந்து மின்கம்பம் சேதம்

திருப்போரூர்:கேளம்பாக்கம் - வண்டலுார் சாலையில் கேளம்பாக்கம் ஊராட்சி உள்ளது. இங்கு சாலை ஓரத்தில் தனியார் நிறுவனம் சார்ந்த ராட்சத விளம்பர பேனர்கள் வைத்துள்ளனர்.
நேற்று முன்தினம் இரவில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது சாலை ஓரம் வைக்கப்பட்டிருந்த பேனர் காற்றில் சாய்ந்து மின்கம்பியில் விழுந்து இரண்டு மின்கம்பங்கள் சேதமடைந்தன.
அப்பகுதியில் இரவு முதல் பகல் 12:00 மணி வரை, 12 மணி நேரத்துக்கு மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்தது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர். மேலும் அச்சாலையில் போக்குவரத்து இடையூறும் ஏற்பட்டது.
கடந்த 14ம் தேதி படூர் ஆறுவழிச்சாலையில் மேற்கு வங்கத்தை சேர்ந்த குப்தா, 42, என்பவர் , டி.வி.எஸ்., ஜூபிடர் ஸ்கூட்டி பைக்கில் சென்றபோது, சாலை ஓரம் வைக்கப்பட்டிருந்த பேனர் காற்றில் சாய்ந்து விழுந்ததில் அவருக்கு தலை, கை, காலில் காயம் ஏற்பட்டது.
நெடுஞ்சாலையோரம் உள்ள பேனர்களை அகற்ற, நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.