எங்கும் விரிந்த பசுமைக்குடை... 'சிகரம்' தொட்ட 'வெற்றி' படை!

திருப்பூர் : 'வனத்துக்குள் திருப்பூர்' 11வது திட்டம்நேற்று துவக்கி வைக்கப்பட்டது.

'வெற்றி' அமைப்பு சார்பில், பல்வேறு பசுமை அமைப்புகளுடன் இணைந்து, 'வனத்துக்குள் திருப்பூர்' என்ற மரம் வளர்க்கும் திட்டம், 2015 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் இதுவரை, 22 லட்சம் மரக்கன்றுகள் நட்டு, மரமாக வளர்க்கப்பட்டுள்ளன. இந்நிலையில், 11வது திட்ட துவக்க விழா, அவிநாசி, தெக்கலுாரில் உள்ள எஸ்.சி.எம்., நிறுவன வளாகத்தில் நேற்று நடந்தது.

வருமானவரித்துறை கோவை மண்டல தலைமை கமிஷனர் அருண் பரத், இணை கமிஷனர் இளங்கிள்ளி, சென்னை எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் நிறுவன தலைவர் செந்துார்பாரி, 'வெற்றி' அமைப்பின் தலைவர் சிவராம், கவுரவ தலைவர் கோபாலகிருஷ்ணன், எஸ்.சி.எம்., குழுமங்களின் நிர்வாகிகள் ஆறுமுகம், நந்தகுமார் உள்ளிட்டோர், மரக்கன்றுகளை நடும் பணியை துவக்கி வைத்தனர்.

ரூ.ஒரு லட்சம் நன்கொடை



'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், மரம்வளர்ப்பு பணிகளை பாராட்டி, மத்திய, மாநில அரசுகளின் விருது பெற்ற விவசாயி, கேத்தனுார் பழனிசாமி, ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கினார்.

மேலும், சிறப்பு விருந்தினர் உட்பட அனைவருக்கும், பாரம்பரிய காய்கறி செடிகளின் விதையை வழங்கினார். துவக்கவிழா, 'வனத்துக்குள் திருப்பூர்' திட்ட இயக்குனர் குமார் துரைசாமி வரவேற்றார்.

மரம் வளர்ப்பு திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து, வெற்றி அமைப்பின் தலைவர் சிவராம் விளக்கி பேசினார். காங்கயம் துளிகள் அமைப்பு நிர்வாகி கவுதம் நன்றி கூறினார்.

அவிநாசி குளங்கள்வளம்பெற வேண்டும்

அவிநாசியில் உள்ள சங்கமாங்குளம் மற்றும் தாமரைக்குளத்தை துார்வாரி சுத்தம் செய்து, மழைநீர் அதிக அளவு தேக்கி வைக்க வேண்டும்; அதற்கு 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டக்குழுவினர் முழு முயற்சி எடுக்க வேண்டும். பல்வேறு இயற்கை ஆர்வலர்கள் பராமரித்து வருகின்றனர். இருப்பினும், பெரிய அளவில் துார்வாரி சுத்தம் செய்து தண்ணீர் தேக்க வேண்டுமென, ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன் கோரிக்கை விடுத்தார். அடுத்து பேசிய, 'வெற்றி' அமைப்பின் தலைவர் சிவராம், ''இரண்டு குளங்களை மட்டுமல்ல; குளத்துக்கு தண்ணீர் வரும் பிரதான வாய்க்கால்களையும் துார்வாரி சுத்தம் செய்ய ஆவன செய்வோம்'' என்று தெரிவித்தார்.

நற்பணிகளை வெளிக்கொணரும்

'தினமலர்' நாளிதழ்

திருமண விழா போன்ற சுப நிகழ்ச்சிகளில், மரம் நடும் பழக்கம் வந்துவிட்டது. மரம் வளர்ப்பு என்பது, தமிழர் பண்பாடாக மாறியுள்ளது; வனத்துக்குள் திருப்பூர் திட்டக்குழு, அப்படி மாற்றியுள்ளது. மரம் நடுவதும், வளர்ப்பதும், நீர்நிலைகளை பாதுகாப்பதுமே அறம். தற்போதைய சூழலில், வாழ்க்கை முறையில் அதிக மாற்றம் தேவை; அந்த மாற்றம் இங்கே உருவாக்கப்படுகிறது. இத்தகைய நல்ல பணிகள் வெளியே தெரிந்தால்மட்டுமே, மற்றவர்கள் இதை பின்பற்ற முடியும். 'தினமலர்'நாளிதழில் செய்தியாக வெளிவருவதால், தமிழகம் முழுவதும் உங்கள் பசுமைப்பணி குறித்த பேச்சு இருக்கிறது. அதன்காரணமாகவே, அனைவரும் 'தினமலர்' நாளிதழுக்கு இன்று நன்றி பாராட்டுகின்றனர்.

- செந்துார் பாரி, தலைவர், 'எக்ஸ்னோராஇன்டர்நேஷனல்' நிறுவனம், சென்னை.

Advertisement