வால்பாறை எம்.எல்.ஏ., கோவையில் மரணம்

கோவை: கோவை மாவட்டம், வால்பாறை தொகுதி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., உடல்நலக் குறைவால் நேற்று காலமானார்.
கோவை மாவட்டம் அன்னுார் தாலுகா, ஒட்டர்பாளையத்தைச் சேர்ந்தவர் அமுல் கந்தசாமி, 61. அ.தி.மு.க., - எம்.ஜி.ஆர்., இளைஞரணி மாநில துணை செயலராக இருந்தார். 2021 சட்டசபை தேர்தலில் வால்பாறை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, எம்.எல்.ஏ.,வானார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, கோவையில் உள்ள மருத்துவமனையில் நான்கு மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தவரின் உடல் நிலை, நேற்று காலை மோசமடைந்தது.
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி நேற்று மருத்துவமனைக்கு வந்து, சிகிச்சை விபரங்களை கேட்டறிந்தார்.
இந்நிலையில், மாலையில் சிகிச்சை பலனின்றி அமுல் கந்தசாமி உயிரிழந்தார்.
கோவை மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவராகவும், வால்பாறை தொகுதி எம்.எல்.ஏ.,வாகவும் நல்ல முறையில் மக்கள் பணியாற்றியவர் அமுல் கந்தசாமி என தன் இரங்கல் செய்தியில் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறியுள்ளார்.
அமுல் கந்தசாமி மறைவை தொடர்ந்து, ஆறு மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தியாக வேண்டும். அடுத்த சட்டசபை பொதுத்தேர்தலுக்கு 10 மாதங்களே உள்ள நிலையில், வால்பாறை இடைத்தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்.