முருகப்பெருமானை பற்றி இழிவாக சொன்னால் நெஞ்சம் பதற வேண்டாமா: பவன் கல்யாண் கேள்வி

மதுரை: "மற்ற மதங்களை பற்றி பேச முடியாதவர்கள், ஹிந்து மதத்தை பற்றி மட்டும் ஏன் இப்படி இழிவாக பேசுகிறார்கள்? முருகனைப் பற்றி இழிவாக பேசினால் நெஞ்சம் பதற வேண்டாமா?" என்று மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கேள்வி எழுப்பியுள்ளார்.
புண்ணியம்
மதுரை என்பது மீனாட்சியம்மன் பட்டினம். மீனாட்சியம்மன் தாய் பார்வதியின் அம்சம். எனவே, முருகனின் தாயாரும் மதுரையில் தான் உள்ளார். முருகனின் தந்தை சிவபெருமான், முதல் சங்கத்திற்கு தலைமையேற்று மதுரையில் தான் இருந்தார்.
எனவே, இந்த மதுரையில் தாய், தந்தை, மகன் இருக்கின்றனர். அப்படியென்றால், மதுரை மக்கள் எத்தனை புண்ணியம் செய்து இருக்க வேண்டும். அந்தப் புண்ணியத்தினால் தான் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவதரித்தார். இவர் முருகனின் அவதாரமாக கருதப்படுகிறார்.
அவர் சிலைக்கு அருகே மயிலும் வைக்கப்பட்டுள்ளது. தேவர் உருவத்தில் முருகன் வாழ்ந்தார். மதுரையில் நடந்த நிகழ்வில் ஒன்றை சொல்லப்போகிறேன். இன்று மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்று அருள், குங்குமம், பிரசாத்தை பெறுகிறோம். ஒரு காலத்தில் மதுரை இருண்டு கிடந்தது. நமக்கு ஒளி கொடுக்கும் மீனாட்சி கோவிலில் ஒளி இல்லை. குங்குமம் கொடுக்க ஆள் இல்லை. கோவில் நொறுங்கி போனது.
தெய்விக பூமி
ஏன் தெரியுமா? 14ம் நூற்றாண்டு தொடக்கத்தில் மதுரையை மாலிக்காபூர் கொள்ளையடித்தான். அதன்பிறகு, 60 ஆண்டுகள் மீனாட்சியம்மன் கோவிலில் விளக்கு இல்லை. மூடப்பட்டிருந்தது. அது இருண்ட காலம். 14ம் நூற்றாண்டின் இறுதியில் மதுரையில் மீண்டும் ஒளி பிறந்தது. அந்த ஒளி விளக்கை ஏற்றி வைத்தார் விஜயநகர இளவரசர் குமார கம்பணன்.
இதில் இருந்து என்ன தெரிந்தது. நமது நாட்டின் நம்பிக்கைக்கு அழிவில்லை. யாராலும் அழிக்க முடியாது. நமது கலாசாரம் ரொம்ப ஆழமானது. நம்மை அசைக்க யாராலும் முடியாது. கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நமது அறம் ஆழமாக இருந்தது. இன்றும் ஆழமாக இருக்கிறது. இனியும் இருக்கும். இதுதான் இந்த தெய்விக பூமியின் பலம்
ஆபத்தானது
முருகனின் வடிவதத்தில் நமது அறம் தொடர்ந்து தளைக்கிறது. உலகை தீமை சூளும் போது அதை அறுப்பது அறம். எல்லோரையும் சமமாக பார்ப்பது அறம். அதன்பெயரே புரட்சி. உலகின் முதல் புரட்சி தலைவர் முருகப்பெருமான். அநீதியை அழித்ததால் அவர் புரட்சி தலைவர்.
முருகன் மாநாட்டை ஏன் தமிழகத்தில் நடத்துகிறீர்கள்? உ.பி., அல்லது குஜராத்தில் நடத்தலாமே? என்று ஒரு கட்சித் தலைவர் கேட்கிறார். இதன்மூலம் பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கிறார். இதுபோல் கேட்பார்கள். இன்று முருகனை பார்த்து கேட்கிறார்கள். நாளை சிவபெருமான், அம்மனை பார்த்து கேட்பார்கள். இந்த சிந்தனை மிகமிக ஆபத்தானது.
போலி மதச்சார்பின்மை
நான் 14வது வயதில் சபரிமலைக்கு போனவன். தைப்பூசத்திற்கு திருத்தணிக்கு சென்றவன். நான் சென்னை மயிலாப்பூரில் படித்தபோது, நெற்றியில் பட்டையுடன் பள்ளிக்கு சென்றவன். சிறிது காலத்தில் எனக்கு மாற்றம் கிடைத்தது. அடுத்த 10 ஆண்டுகளில் நெற்றியில் விபூதி பூசுவதை கேள்வி கேட்டார்கள். என்னுடைய 14 வயதிலேயே இதுபோன்ற கேள்விகளை சந்தித்தேன். எல்லோருக்கும் இதுபோன்ற அனுபவங்களை சந்தித்து இருப்பீர்கள். ஏனெனில் ஹிந்துக்கள் மதச்சார்பில்லாதவர்கள்.
ஒரு கிறிஸ்தவர் கிறிஸ்தவராக இருக்கலாம், ஒரு முஸ்லிம் முஸ்லிமாக இருக்கலாம். ஆனால், ஒரு ஹிந்து ஒரு ஹிந்துவாகவே இருந்தால் இவர்களுக்கு பிரச்னை. ஒருவன் ஹிந்துவாக இருந்து விட்டால், அவன் மதவாதி. இதுதான் போலி மதச்சார்பின்மை.
துணிச்சல் உண்டா?
என் மத நம்பிக்கையை கொண்டாட எனக்கு உரிமை உள்ளது. அதை கேட்க நீங்கள் யார்? உங்கள் நம்பிக்கையை நாங்கள் கேள்வி கேட்கவில்லை. அதே நாகரிகத்தை நீங்கள் கடைபிடியுங்கள். என் மதத்திற்கு மரியாதை கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. அவமரியாதை செய்யாதீர்கள்.
முருகனை பற்றி கேள்வி கேட்கும் நீங்கள், அரேபியாவில் இருந்து வந்த மதங்களைப் பற்றி கேள்வி கேட்க முடியுமா? அதற்கான துணிச்சல் உங்களுக்கு உண்டா?
அதனால் சொல்கிறேன். சீண்டிப் பார்க்காதீர்கள். சாதுமிரண்டால் காடு கொள்ளாது. முருகன் தமிழ்க்கடவுள். ஆனால், அவர் எல்லா இடத்திலும் இருக்கிறார். வடஇந்தியாவில் கார்த்திகேயராகவும், ஆந்திரா, கர்நாடகாவில் சுப்ரமணியராகவும், தமிழகத்தில் முருகராகவும் இருக்கிறார். உலகம் முழுவதும் முருகன் பரந்திருந்தாலும், தமிழகத்தில் தான் அவர் பாதம் ஊன்றியுள்ளது. எனவே, தான் முருக பக்தர்களின் மாநாடு மதுரையில் நடக்கிறது.
இங்கு சிலர் நிறத்தை வைத்து அரசியல் செய்கின்றனர். நமக்கு நிறத்தில் எந்த பேதமும் இல்லை. கிருஷ்ண பகவான், காளி மாதா கருப்பு. நாம் நிறத்தின் வழியாக பார்ப்பதில்லை. அகத்தின் வழியாக பார்க்கிறோம்.
இங்கு கருப்பு நிறத்தை வைத்து கடவுளை சீண்டும் கூட்டம் உள்ளது. நம்மை இணைக்கும் முருகனை சீண்டி பார்க்கிறது ஒரு கூட்டம். கந்த சஷ்டி கவசத்தை கிண்டல் செய்கின்றனர். அவர்களுக்கு கிண்டல் செய்யும் உரிமை உண்டு. இதனை கேட்டால், இதுதான் மதசார்பின்மை என்பார்கள்.
மற்றவர்களின் நம்பிக்கையை கொச்சைப்படுத்த அவர்கள் யார்? முருகனை கேள்வி கேட்க அவர்கள் யார்? அறத்தை அசைத்து பார்க்க அவர்கள் யார்? அவர்களால் மற்ற மதங்களை பற்றி பேச முடியுமா? நம் மதத்தை பற்றி மட்டும் ஏன் இப்படி பேசுகிறார்கள்.
பதற வேண்டாமா?
60 ஆண்டுகள் மதுரை மீனாட்சியம்மன் கோவில் மூடிக்கிடந்ததை பார்த்துக் கொண்டு தானே இருந்தோம். அந்த துணிச்சலால் பேசுகிறார்கள். பொறுமை என்பது கோழைத்தனம் அல்ல. இங்குள்ள முருக பக்தர்கள் அனைவரும் ஒரு பார்வை பார்த்தாலே போதும். நம்ம கடவுளை திட்டும் கூட்டம், காணாத கூட்டமாகிவிடும்.
சிவபெருமானின் நெற்றிக்கண்ணை திறந்த பூமி இது. முருகனை பற்றி இழிவாக சொன்னால், உங்களின் இதயம் நொறுங்க வேண்டாமா? துடிக்க வேண்டாமா? பதற வேண்டாமா? நம்மை காப்பாற்றும் முருகனை நாம் காப்பாற்றத் தேவையில்லையா; கைமாறு செய்ய வேண்டாமா? நன்றியை காட்ட வேண்டாமா?
எப்படி மின்னல் கண்களை குருடாக்குமோ, எப்படி காட்டாற்று வெள்ளம் கரைகளை உடைக்குமோ, அதுபோல பொங்குவோம். அநீதியை தட்டிக் கேட்க திரளுவோம். அறத்தை காக்க அனைவரும் எழுவோம். முருகன் நீதியை காப்பாற்ற புறப்படுவோம். முருகப் படையை திட்டும் கூட்டத்தை தகர்ப்போம். இப்படை தோற்கின் எப்படை வெல்லும்!
இந்திய அரசியலமைப்பு சட்டம் நமது அறத்தை காக்கிறது. அரசியலமைப்பு சட்டம் இல்லாத காலத்தில் மாலிக்காபூர் வெறியாட்டம் போட்டான். ஆனால், கடந்த 75 ஆண்டுகளாக அரசியலமைப்பு சட்டம் இருக்கும் போதே, ஒரு கூட்டம் ஆடுகிறது. காரணம், நாச சக்திகளை ஆரம்பத்திலேயே கிள்ளி எறியாமல் விட்டது தான், இவ்வாறு அவர் பேசினார்.








