ஆயிரம் சந்தேகங்கள்: பணி ஓய்வுக்குப்பின் பணத்தை எதில் முதலீடு செய்யலாம்?

ஓய்வூதியதாரரான நான், வங்கியில் ஓய்வூதியர் கடன் வாங்கி உள்ளேன். இ.எம்.ஐ., செலுத்தி வரும் நிலையில், ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள வட்டி குறைப்பு என் கடனுக்கும் பொருந்துமா?

எஸ்.மகேசன், மதுரை.

இரண்டு ஆண்டு எம்.சி.எல்.ஆர்., எனப்படும், 'மார்ஜினல் காஸ்ட் ஆப் பண்டுஸ் பேஸ்டு லெண்டிங் ரேட்' என்பதை அடிப்படையாக கொண்டு தான் ஓய்வூதியர் கடனுக்கான வட்டி விகிதம் நிர்ணயம் செய்யப்படுகிறது. 2025 ஜூன் 15 நிலவரப்படி, அது 9.05 சதவீதமாக இருக்கிறது.

அதோடு வங்கியின் லாபம் சேர்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டிக் குறைப்பினால், இந்த எம்.சி.எல்.ஆர். தற்போது குறையவில்லை. வருங்காலத்தில் ரெப்போ வட்டி மேலும் குறையும்போது, இதுவும் கம்மியாகலாம்; காத்திருங்கள்.

மத்திய அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளேன். ஓய்வுகால பணப்பலன்களை எதில் முதலீடு செய்வது சிறந்தது?

என்.எஸ்.சண்முகம், கோவை.

உங்களுடைய 'ரிஸ்க்' எடுக்கும் துணிச்சலைப் பொறுத்து தான் எந்த முடிவும் எடுக்க முடியும். ரிஸ்கே வேண்டாம் என்று கருதினால், வங்கி, அஞ்சலகம் ஆகியவற்றில் உள்ள மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டங்களில் பணத்தைப் போட்டுவிட்டு, வரக்கூடிய வட்டியை வாங்கி நிம்மதியாக இருங்கள்.

கொஞ்சம் ரிஸ்க் எடுக்க முடியுமானால், மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்யுங்கள். கூடுதல் வருவாய் கிடைக்கும். எப்படி இருந்தாலும், குறைந்தபட்சம், இரண்டு விஷயங்களில் கூடுதல் கவனத்தோடு இருங்கள்.

போதுமான மருத்துவ காப்பீடு எடுத்துக் கொள்ளுங்கள். 12 மாதங்கள் வரை, மாதாந்திர செலவுகளுக்குத் தேவைப்படும் தொகையை எப்போதும் வங்கிக் கையிருப்பில் வைத்துக் கொள்ளுங்கள்.


வீடு கட்டி வாடகைக்கு விட்டு, குடித்தனக்காரர்களிடம் இருந்து வாடகை வசூல் செய்வது எனக்கு மிகவும் சிரமமாக இருக்கிறது. இதற்குப் பதில் வேறு முதலீட்டு வழி சொல்லுங்கள்.

நஞ்சப்ப செட்டி, வாட்ஸாப்.

உங்களிடம் 50 லட்ச ரூபாய்க்கு மேல் பணம் இருந்து, ரிஸ்க் எடுக்கும் துணிச்சலும் இருக்குமானால், வங்கிகளும், தனியார் நிதிச்சேவை நிறுவனங்களும் வழங்கக்கூடிய பி.எம்.எஸ்., எனப்படும் 'போர்ட்போலியோ மேனேஜ்மென்ட் சர்வீசஸ்' வசதியைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இதில் உள்ள பண்டு மேனேஜர்களின் கட்டணம், லாபப் பகிர்வு அதிகம் என்றாலும், திறமையான, ஆய்வுப்பூர்வமான முதலீட்டு ஆலோசனைகள் கிடைப்பதால், லாபம் அதிகரிக்கலாம். ஒரு மட்டத்துக்கு மேல் நிதி ஆதாரமும் வசதியும் இருக்குமானால், இதுபோன்ற பி.எம்.எஸ்., சேவையைப் பயன்படுத்துவது உகந்தது.

முதலீடு, வளர்ச்சி, ஆய்வு போன்ற மண்டையிடிகளை வேறொருவர் தலையில் கட்டிவிடலாம் அல்லவா?

அபார்ட்மென்ட்டில், பராமரிப்பு தொகையை செயலி வாயிலாக செலுத்துவது பாதுகாப்பானதா?


சுப்புலட்சுமி, கோவை.

வங்கியோடு இணைப்பு கொடுத்து, பராமரிப்பு கட்டணத்தை இணையம் வாயிலாக செலுத்துவதற்கு உதவுவதில் இத்தகைய செயலிகள் பெரிதாக பிரச்னை கொடுப்பதில்லை. பாதுகாப்பாகவும் இருக்கின்றன.

ஆனால், இந்தச் செயலிகள், திரட்டக்கூடிய தனிநபர் தகவல்களின் பாதுகாப்பு தான் சந்தேகத்தைக் கிளப்புகின்றன. இத்தகைய செயலிகள், தரவுகளை எங்கே சேமிக்கின்றன, அவை பிற்காலத்தில் எவ்வாறெல்லாம் பயன்படுத்தப்படலாம் என்ற கேள்விகள் எழாமல் இல்லை.

ஒரு சேவையைத் தருகிறேன், பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று ஆசைகாட்டி, இச்செயலிகள் பயனர் தரவுகளை அறுவடை செய்கின்றனவோ என்ற சந்தேகம் மேலோங்குகிறது.

இன்றைக்கு 'டேட்டா பிரைவசி' மிக மிக முக்கியம். உங்களுக்கு நம்பகமான, ஏற்கனவே பயன்படுத்திவரும் முறையில் அடுக்கக பராமரிப்புக் கட்டணத்தைச் செலுத்துவதே நல்லது.

எதிர்காலத்தில் பணவீக்கத்தை எதிர்கொள்ள எந்தவிதமான, பாதுகாப்பான (ஓரளவுக்கு) மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்யலாம் என்பதை விளக்கமாக தெரிவிக்க வேண்டுகிறேன்.

ஜி.சந்திரசேகர பாண்டியன்,

திண்டுக்கல்.

லார்ஜ் கேப் பண்டுகள், வேல்யூ பண்டுகள், பிளெக்ஸி கேப் பண்டுகள், அக்ரெசிவ் ஹைப்ரிட் பண்டுகள், மல்டி அசெட் அலகேஷன் பண்டுகள் ஆகியவை, பணவீக்கத்தையும் சமாளித்து, ஓரளவுக்கு லாபத்தை ஈட்டித் தரக்கூடிய பண்டு வகைகள் ஆகும்.

இன்றைக்கு பங்குச் சந்தை தள்ளாட்டத்துடன் இருக்கும் நிலையில், ஓராண்டு, ஈராண்டு களில் லாபம் ஈட்ட முடியும் என்று எதிர்பார்க்க வேண்டாம். குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகாலம் காத்திருங்கள். எஸ்.ஐ.பி., முறையில் முதலீடு செய்தால், நிச்சயம் வரவு நல்லபடியாக இருக்கும்.

எஸ்.ஐ.பி., முறையில், மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்து வருகிறேன், இந்த ஆண்டு வருமான வரி தாக்கல் செய்யும் போது இதிலிருந்து கிடைத்த லாபத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, வரி செலுத்த வேண்டி வருமா?

குருமூர்த்தி, கோயம்புத்துார்.

மியூச்சுவல் பண்டு யூனிட்டு கள் விற்பனை செய்தால் தான், வரி விதிப்புக்கு உள்ளாகும். யூனிட்டுகளை விற்பனை செய்யாமல், அந்த பண்டின் என்.ஏ.வி., மதிப்பு மட்டும் உயர்ந்துகொண்டே இருக்கிறது என்றால், அந்த லாபத்துக்கு வரி கட்ட வேண்டாம்.

யூனிட்டுகளை ரிடீம் செய்யப் போகிறீர்கள் என்றால், அந்த லாபத்துக்கு நீண்டகால அல்லது குறுகிய கால மூலதன ஆதாய வரி கட்ட வேண்டும். ஓராண்டுக்குள் என்றால் அது குறுகிய காலம். அதற்கு 20 சதவீத அளவுக்கு மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டும். 12 மாதங்களுக்கு மேல் என்றால், அது நீண்டகாலம்.

ஓராண்டில் கிடைக்கும் லாபத்தில் 1.25 லட்சம் ரூபாய் வரை வரி கிடையாது. அதற்கு மேலுள்ள லாபத் தொகைக்கு 12.5 சதவீத வரி கட்ட வேண்டும்.

எஸ்.ஐ.பி., விஷயத்தில் ஒரு ஆதாயம் என்னவெனில், முதலில் வந்தது, முதலில் வெளியேறியது என்ற விதத்தில் கணக்கிடப்படும். முதல் மாத எஸ்.ஐ.பி., வாயிலாக வந்த யூனிட்டுகள் தான் முதலில் ரிடீம் ஆகும்.


அப்படிப் பார்க்கும்போது, அந்த யூனிட்டுகள் உங்கள் கையில் இருந்த காலம், 12 மாதங்களுக்கு மேல் இருந்திருக்கும். அதனால், வரி குறைவாகவே இருக்கும்.


வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.


ஆயிரம் சந்தேகங்கள்

தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.


ஆர்.வெங்கடேஷ்


pattamvenkatesh@gmail.com ph: 98410 53881

Advertisement