கடந்த 11 ஆண்டுகளில் காபி ஏற்றுமதி 125 சதவிகிதம் அதிகரிப்பு

புதுடில்லி:காபி ஏற்றுமதி, கடந்த 11 ஆண்டுகளில் 125 சதவீதம் அதிகரித்து, 15,300 கோடி ரூபாயாக உள்ளது அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.

மத்திய அரசின் தரவுகளின்படி, இந்திய காபி வாரியம் எடுத்த தொடர் நடவடிக்கைகள் காரணமாக, கடந்த 11 ஆண்டுகளில் நாட்டின் காபி ஏற்றுமதி கிட்டத்தட்ட 125 சதவீதம் அதிகரித்து 15,300 கோடி ரூபாயாக உள்ளது. நாட்டின் காபி உற்பத்தியில் கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகம் முன்னணி மாநிலங்களாக உள்ளன.

இந்தியாவில் இருந்து காபி இறக்குமதி செய்யும் முக்கிய நாடுகளில் இத்தாலி, ஜெர்மனி, பெல்ஜியம், மத்திய கிழக்கு நாடுகள், கொரியா மற்றும் ஜப்பான் ஆகியவை அடங்கும். நாட்டின் காபி ஏற்றுமதிக்கு ஐரோப்பா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

உலகளவில் இந்தியா 3.50 சதவீத பங்களிப்புடன், ஏழாவது பெரிய உற்பத்தியாளராகவும், 5 சதவீத பங்களிப்போடு 5வது பெரிய ஏற்றுமதியாளராகவும் உள்ளது.

மேலும், இந்தியா ஆண்டுக்கு கிட்டத்தட்ட 3.6 லட்சம் டன் காபி உற்பத்தி செய்வதுடன், 20 லட்சம் மக்கள் நேரடி யாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

கடந்த 2014 - 15ம் நிதியாண்டில், காபி ஏற்றுமதி 6,800 கோடி ரூபாயாக இருந்த நிலையில், 2022 - 23ல் 9,690 கோடி ரூபாயாக இருந்தது. இதைத்தொடர்ந்து, 2023 - 24ல் இது 10,880 கோடி ரூபாயாக இருந்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன.

Advertisement