டிரம்புடன் பேசும் திட்டமே எங்களிடம் இல்லை:ஈரான் விவகாரத்தில் ரஷ்யா திட்டவட்டம்

மாஸ்கோ: ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலின் நீட்சியாக, டிரம்பிடம் அது பற்றி பேசும் திட்டமே இல்லை என்று ரஷ்யா திட்டவட்டமாக அறிவித்து உள்ளது.
பெரியண்ணன் அமெரிக்காவின் தலையீடு ஈரான், இஸ்ரேல் பிரச்னையில் எதிரொலித்தே விட்டது. ஈரானின் 3 முக்கிய அணுசக்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறது. இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் மீதான தாக்குதல் வளைகுடா நாடுகளிலும், மற்ற உலக நாடுகள் மத்தியிலும் ஒருவித பதற்றத்தை உருவாக்கி உள்ளது.
அமெரிக்காவின் தாக்குதலையும், ஈரானின் அடுத்தக்கட்ட திட்டம் குறித்தும் மற்ற நாடுகளை விட ரஷ்யா, சீனாவின் பார்வை என்னவாக இருக்கும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இப்படியான சூழலில், இந்த பிரச்னை குறித்து அமெரிக்க அதிபர் டிரம்பிடம் ரஷ்ய அதிபர் புடின் பேசும் திட்டம் இல்லை என்று க்ரெம்பிளின் மாளிகை அறிவித்து உள்ளது. இதுகுறித்து க்ரெம்பிளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியதாவது;
இப்படியான ஒரு திட்டம் எங்களிடம் தற்போதைக்கு இல்லவே இல்லை. தேவை ஏற்படும் பட்சத்தில் தொலைபேசியில் அவரிடம் (டிரம்ப்) பேசப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதே நேரத்தில் ஈரானை தாக்கியதன் மூலம் அமெரிக்கா எதை சாதித்தது என்று ரஷ்ய முன்னாள் அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் கேள்வி எழுப்பி உள்ளார். அவர் மேலும் கூறுகையில், ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி நிலையங்களை தாக்கியதன் மூலம் அமெரிக்கர்கள் என்ன சாதித்து இருக்கிறார்கள்? அணுசக்தி நிலையத்தின் முக்கியமான உள் கட்டமைப்பு கூட சிறிதும் பாதிக்கப்படவில்லை என்று கூறி உள்ளார்.
அண்மையில், உக்ரைன்-ரஷ்யா நாடுகள் இடையேயான போர் பற்றி கருத்துக் கூறிய டிரம்ப், புடின் ஒரு பைத்தியம் என்றும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சொல்பேச்சு கேளாதவர் என்றும் விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

