ஐந்து விக்கெட் சாய்த்தார் பும்ரா: இந்திய அணி முன்னிலை

லீட்ஸ்: லீட்ஸ் டெஸ்டில் பும்ரா 5 விக்கெட் வீழ்த்த, இந்திய அணி 96 ரன் முன்னிலை பெற்றது.


இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ('ஆண்டர்சன்-சச்சின்' டிராபி) பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் லீட்சில் நடக்கிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 471 ரன் எடுத்தது. இரண்டாவது நாள் முடிவில் இங்கிலாந்து அணி 209/3 ரன் எடுத்து, 262 ரன் பின் தங்கி இருந்தது.
மூன்றாவது நாள் ஆட்டத்தில் பிரசித் கிருஷ்ணா ஓவரில் ஹாரி புரூக் வரிசையாக ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்தார். சதம் கடந்த போப் (106, 14X4) கிருஷ்ணா பந்தில் அவுட்டானார். சிராஜ் 'வேகத்தில்' கேப்டன் ஸ்டோக்ஸ் (20) வெளியேற, இந்திய ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர். ஜடேஜா பந்தை ஒரு ரன்னுக்கு தட்டிவிட்ட புரூக், டெஸ்ட் அரங்கில் 12வது அரைசதம் எட்டினார். உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து 327/5 ரன் எடுத்திருந்தது.


கலக்கல் 'கேட்ச்': பின் புரூக், ஜேமி ஸ்மித் சேர்ந்து அதிவிரைவாக ரன் சேர்த்தனர். ஜடேஜா பந்தை, கீழே படுத்து கீப்பர் தலைக்கு மேல் பவுண்டரிக்கு அனுப்பினார் புரூக். தன்னை போல 'ஷாட்' அடித்ததை பார்த்து ரிஷாப் புன்னகைத்தார். மறுபக்கம் கிருஷ்ணா பந்தில் சிக்சர் அடித்தார் ஜேமி. இதே ஓவரில் மீண்டும் பந்தை துாக்கி அடித்தார். இதை எல்லை அருகே பிடித்த ஜடேஜா தடுமாறினார். உடனே பந்தை மைதானத்திற்குள் எறிந்தார். 'ரிலே கேட்ச்' முறையில் சுதர்சன் கச்சிதமாக பிடிக்க, ஜேமி (40) நடையை கட்டினார்.

களத்தில் வாக்குவாதம்: சிராஜ் ஓவரில் தொடர்ந்து இரண்டு பவுண்டரி அடித்தார் புரூக். இதனால் ஆத்திரமடைந்த சிராஜ் ஏதோ கூற, சின்னதாக வார்த்தை மோதல் ஏற்பட்டது. கிருஷ்ணா வீசிய பவுன்சரை அவசரப்பட்டு 'ஹூக் ஷாட்' அடித்தார் புரூக். எல்லையில் காத்திருந்த ஹர்துல் தாகூர் பிடிக்க, புரூக் (99, 11X4, 2X6) ஒரு ரன்னில் சதத்தை எட்ட தவறினார். நொந்து போன இவர், தலையில் கை வைத்தவாறு வெளியேறினார்.

இங்கிலாந்து பதிலடி: கடைசி கட்டத்தில் இங்கிலாந்து 'டெயிலெண்டர்கள்' தொல்லை கொடுத்தனர். வோக்ஸ், கார்ஸ் அதிரடியாக 'பாஸ் பால்' முறையில் ரன் குவித்தனர். இவர்கள் இந்திய பந்துவீச்சை சிதறடிக்க, குறைந்தது 70 ரன் வரை முன்னிலை பெறும் வாய்ப்பு தகர்ந்தது. கார்ஸ் 22 ரன் எடுத்தார். பும்ரா 'வேகத்தில்' வோக்ஸ் (38) போல்டானார். ஜோஷ் டங்கையும் (11) போல்டாக்கி, தனது 5வது விக்கெட்டை பெற்றார் பும்ரா. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 465 ரன்னுக்கு ஆல் அவுட்டாக, இந்தியா 6 ரன் முன்னிலை பெற்றது.

ஜெய்ஸ்வால் ஏமாற்றம்: பின் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் (4) ஏமாற்றினார். ஸ்டோக்ஸ் பந்தில் சுதர்சன் (30) அவுட்டானார். மழை குறுக்கிட, 3வது நாள் ஆட்டம் முன்னதாக முடிவுக்கு வந்தது. இந்திய அணி 90/2 ரன் எடுத்து, 96 ரன் முன்னிலை பெற்றிருந்தது. கே.எல்.ராகுல் (47), கேப்டன் சுப்மன் கில் (6) அவுட்டாகாமல் இருந்தனர்.

ரிஷாப் 150 'கேட்ச்'
பிரசித் கிருஷ்ணா பந்தில் போப் அடித்த பந்தை பிடித்தார் ரிஷாப் பன்ட். இது டெஸ்ட் அரங்கில் இவரது 150வது கேட்ச் (86 இன்னிங்ஸ்). இம்மைல்கல்லை எட்டிய மூன்றாவது இந்திய விக்கெட்கீப்பரானார். முதல் இரு இடங்களில் தோனி (256 கேட்ச், 166 இன்னிங்ஸ்), கிர்மானி (160 கேட்ச், 151 இன்னிங்ஸ்) உள்ளனர்.

99 ரன்னில்
லீட்சின் ஹெடிங்லி மைதானத்தில் 99 ரன்னில் அவுட்டான மூன்றாவது வீரரானார் ஹாரி புரூக். முனனதாக சலீம் மாலிக் (பாக்., எதிர், இங்கி., 1987), மைக்கேல் ஆதர்டன் (இங்கி., எதிர், தெ.ஆ., 1994) ஒரு ரன்னில் சதத்தை நழுவவிட்டனர்.
* இந்தியாவுக்கு எதிராக 99 ரன்னில் அவுட்டான இரண்டாவது இங்கிலாந்து வீரரானார் புரூக். இதற்கு முன் டிரஸ்கோதிக் (மொகாலி, 2001) இப்படி அவுட்டானார்.

பீல்டிங் மோசம்
நேற்று பும்ரா பந்தில் புரூக் கொடுத்த கேட்ச்சை ஜெய்ஸ்வால் கோட்டைவிட்டார். நேற்று முன் தினம் 3 சேர்த்து பும்ரா பந்துவீச்சில் மட்டும் நான்கு கேட்ச் (ஜெய்ஸ்வால்-3, ஜடேஜா-1) நழுவவிடப்பட்டன

பறந்த பெரிய பந்து
லீட்ஸ் மைதானத்தில் நேற்று பலமாக காற்று வீசியதால், ரசிகர்கள் கையில் இருந்த பெரிய 'சைஸ்' பந்துகள் மைதானத்திற்குள் பல முறை விழுந்தன. இதை பாதுகாவலர்கள் அகற்றினர்.

முதல் ஆசிய பவுலர்
டெஸ்ட் அரங்கில் 14வது முறையாக 5 விக்கெட் (46 போட்டி) வீழ்த்தினார் பும்ரா.
* அன்னிய மண்ணில் அதிக முறை 5 விக்கெட் வீழ்த்திய இந்திய பவுலர்களில் முதலிடத்தை கபில் தேவ் (66 போட்டி, 12 முறை) உடன் பகிர்ந்து கொண்டார் பும்ரா (34 போட்டி, 12 முறை).
* 'சேனா' நாடுகள் எனப்படும் தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 150 விக்கெட் வீழ்த்திய முதல் ஆசிய பவுலரானார் பும்ரா. 'சேனா' நாடுகளுக்கு எதிராக 10வது முறையாக 5 விக்கெட் வீழ்த்தினார்.

கருப்பு பட்டை
இங்கிலாந்து முன்னாள் வீரர் டேவிட் லாரன்ஸ், 61, நேற்று காலமானார். இவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்தியா, இங்கிலாந்து வீரர்கள், கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர்.

குல்தீப் எங்கே
ஆடுகளத்தில் நேற்று பந்துகள் நன்கு சுழன்றன. ஷர்துல் தாகூருக்கு பதில் 'சுழல்' மாயாவி குல்தீப் யாதவிற்கு வாய்ப்பு அளித்திருக்கலாம்.

Advertisement