'வேறு யாரும் இதை செய்திருக்க முடியாது'

ஈரான் மீது அமெரிக்கா நேரடி தாக்குதல் நடத்திய பின், அதிபர் டொனால்டு டிரம்ப் வெள்ளை மாளிகையில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறியுள்ளதாவது:
ஈரானில் உள்ள நடான்ஸ், இஸ்பஹான், போர்டோ ஆகிய மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது நாங்கள் மிகவும் வெற்றிகரமான தாக்குதலை நடத்தி முடித்துள்ளோம். முதன்மை தளமான போர்டோ முழுதுமாக அழிந்தது. குண்டு வீசிய அனைத்து விமானங்களும் பாதுகாப்பாக நாடு திரும்பின.
இது ஒரு அற்புதமான ராணுவ வெற்றி. பயங்கரவாதத்தை ஆதரிக்கும் உலகின் முதன்மையான நாடு ஈரான். அவர்களுக்கு அணு ஆயுதம் கிடைக்கக் கூடாது என்பதே இந்த தாக்குதலின் நோக்கம். உலகில் வேறு எந்த ராணுவமும் இதை செய்திருக்க முடியாது.
இப்போது அமைதிக்கான நேரம். ஆகையால், ஈரான் சமாதான பேச்சுக்கு வர வேண்டும். அவ்வாறு வராவிட்டால், எதிர்கால தாக்குதல்கள் எளிமையாகவும், வலிமையாகவும் இருக்கும். அமைதி பேச்சில் விரைவில் முடிவு எட்டப்படாவிட்டால், மேலும் பல இலக்குகள், வேகமாகவும், துல்லியமாகவும் தாக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.