நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு அளந்து கொடுக்காமல் அலட்சியம்:இரு துறை அதிகாரிகளால் விவசாயம் பாதிப்பு

ஊத்துக்கோட்டை:ஏரிகளுக்கு செல்லும் நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பை கண்டுகொள்ளாத நீர்வள ஆதாரத்துறை மற்றும் வருவாய் துறையினரின் அலட்சியத்தால், ஒவ்வொரு ஆண்டு பருவமழை காலங்களில் மழைநீர் கடலில் கலந்து வருகிறது. இதனால், விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஆரணி, கொசஸ்தலை ஆறுகளில் இருந்து, அருகில் உள்ள ஏரிகளுக்கு செல்லும் நீர்வரத்து கால்வாய் வாயிலாக, ஏரிகளுக்கு தண்ணீர் செல்கிறது. இதன் வாயிலாக, ஏராளமான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில், 576 பெரிய ஏரிகள், ஊரக உள்ளாட்சித்துறை கட்டுப்பாட்டில், 654 சிறிய ஏரிகள் மற்றும் 3,227 குளம், குட்டைகள் உள்ளன.
கடந்தாண்டு குடிமராமத்து மற்றும் துார்வாரும் திட்டத்தின் கீழ், 1,212 ஏரி, குளம், குட்டை ஆகியவை துார்வாரப்பட்டன. மீதமுள்ள பெரும்பாலான ஏரி, குளம், குட்டை ஆகியவை ஆக்கிரமிப்பு, வருவாய்த் துறை அளந்து கொடுக்காதது உள்ளிட்ட காரணங்களால், ஏரிகளுக்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை உள்ளது.
ஆந்திராவில் இருந்து தமிழகத்தை நோக்கி வரும் ஆரணி ஆறு, சிட்ரபாக்கம், பனப்பாக்கம், செங்காத்தாகுளம், பாலேஸ்வரம், ஏ.என்.குப்பம் உள்ளிட்ட நீர்நிலைகளில் சேமிக்கப்பட்டு, பழவேற்காடு அருகே கடலில் கலக்கிறது.
இதில், ஆரணி ஆற்றின் கரையோரம் உள்ள கிராம ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் வகையில் நீர்வரத்து கால்வாய் உள்ளது. தற்போது, வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பில் இருப்பதால், ஏரிகளுக்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை உள்ளது.
இழுத்தடிப்பு
ஆரணி ஆற்றில் இருந்து நீர்வரத்து கால்வாய் வாயிலாக, சென்னங்காரணி கிராமம் வழியே, காக்கவாக்கம் ஏரிக்கு தண்ணீர் செல்கிறது. இதில், ஆரணி ஆற்றில் இருந்து சென்னங்காரணி கிராமம் வரை உள்ள வரத்து கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதால், தண்ணீர் வருவதில்லை.
இதனால், கால்வாய் நீரை நம்பியுள்ள விவசாயிகள், பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வரத்து கால்வாயை அளந்து கொடுக்குமாறு அதிகாரிகளிடமும், ஜமாபந்தியிலும் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே, கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பருவமழை துவங்குவதற்குள் மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு செல்லும் நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தண்ணீரை சேமிக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னங்காரணி கிராமத்திற்கு செல்லும் நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு குறித்து வருவாய்த் துறையினருக்கு புகார் அளித்ததின்படி, வருவாய் மற்றும் நீர்வள துறை அதிகாரிகள் அளவீடு செய்தனர். இதில், சில விவசாயிகள் கல்லை வேறு இடத்தில் மாற்றி நட்டுள்ளனர். இதனால், மீண்டும் அளந்து கொடுக்குமாறு வருவாய்த் துறையினருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.
- நீர்வள ஆதாரத்துறை,
ஊத்துக்கோட்டை.
சென்னங்காரணி கிராமத்தில் நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பால், வெள்ளப்பெருக்கு காலங்களில் விவசாய நிலங்களில் தண்ணீர் சூழ்ந்து விடுகிறது. இதனால், 200 ஏக்கர் பயிர் நாசமாகிறது. அரசு சார்பில் நிதி ஒதுக்காததால், விவசாயிகள் ஒன்று சேர்ந்து, 4 லட்சம் ரூபாய் செலவு செய்து கால்வாய் துார்வாரப்பட்டது. இதில், சிலர் மட்டும் ஆக்கிரமிப்பு நிலத்தை, தங்களது நிலம் என, சொந்தம் கொண்டாடுகின்றனர். வருவாய்த் துறையினர் அளவீடு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ்.கண்ணன்,
ஏரி சங்க தலைவர்,
சென்னங்காரணி.
மேலும்
-
வேலுார் பென்லேன்ட் மருத்துவமனையை நாளை மறுநாள் திறக்கிறார் முதல்வர்; டாக்டர், நர்ஸ் நியமனம் இன்றி 'மல்டி ஸ்பெஷாலிட்டி' எப்படி?
-
மாற்று மதத்தினர் தேவையற்ற சொற்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்: இயக்குனர் அமீருக்கு நடிகை கஸ்துாரி பதிலடி
-
ஹோர்முஸ் நீரிணை மூடல்; கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியாவுக்கு பாதிப்பா? உண்மை நிலவரம் இதோ!
-
அரசு மருத்துவமனையில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள்
-
ஒரே நேரத்தில் ஐந்து லட்சம் பேர் கந்த சஷ்டி கவசம்; காற்றில் கலந்து பக்தி மணம் பரப்பியது கந்தன் நாமம்
-
முருக பக்தர்கள் மாநாடால் அரசியல் மாற்றம் உறுதி தமிழிசை நம்பிக்கை