அமெரிக்கா தாக்கியும் பின்வாங்காத ஈரான்: இஸ்ரேல் மீது சக்திவாய்ந்த ஏவுகணை வீசியது

5

அமெரிக்கா நேற்று நேரடியாக தாக்குதல் நடத்தியும், மோதலில் இருந்து பின் வாங்காத ஈரான், சில மணி நேரங்களில் இஸ்ரேலின் முக்கிய நகரங்களை குறி வைத்து சக்திவாய்ந்த, 'கொரம்ஷார் - 4' ஏவுகணையை ஈரான் வீசியது.

மேற்காசிய நாடுகளான இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 10 நாட்களாக நடந்து வரும் சண்டை முக்கிய கட்டத்தை நேற்று எட்டியது. 'ஈரான் மீது நேரடியாக தாக்குதல் நடத்தப்படுமா என்பது குறித்து இரு வாரங்களில் முடிவு செய்வேன்' என அறிவித்திருந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். இரண்டு நாட்களுக்குள்ளேயே தாக்குவது என முடிவு எடுத்துவிட்டார்.

ஈரானின் அணுசக்தி வளாகங்கள் மீது அமெரிக்காவின் விமானப் படை விமானங்கள் மற்றும் கடற்படை நேரடியாக நேற்று வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின.

இதில் மூன்று அணுசக்தி தளங்கள் முற்றிலும் அழிந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இஸ்ரேல், விமான போக்குவரத்துக்கான தன் வான் பரப்பை மூடியது.

இந்த தாக்குதலுக்காக அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் பதிலடி தரப்படும் என ஈரான் கூறியுள்ளது. மேற்கு ஆசியாவில் உள்ள அமெரிக்க தளங்களும், இஸ்ரேல் நகரங்களையும் தாக்க போவதாக அறிவித்தது.

அடுத்த சில மணிநேரங்களில் இஸ்ரேலின் டெல் அவிவ், ஹைபா நகரங்களின் மீது 40க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை இரண்டு கட்டங்களாக ஈரான் நேற்று காலை வீசியது.

ஏவுகணை வருவதை கண்டறிந்து இஸ்ரேல் முழுதும் எச்சரிக்கை சைரன் அலறியது. இதனால் மக்கள் பாதுகாப்பு அறைகளில் தஞ்சமடைந்தனர்.

இந்த ஏவுகணைகளில் பல, இஸ்ரேலின் வான் கவசத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டாலும், சில ஏவுகணைகள் விழுந்து வெடித்தன.

நேற்றைய தாக்குதலில் சக்திவாய்ந்த கொரம்ஷார் - 4 ஏவுகணையை ஈரான் வீசியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தன. 1980களில் ஈரான் - ஈராக் போரின் போது, கடும் சண்டை நடந்த ஈரானின் கொரம்ஷார் நகரின் நினைவாக இந்த ஏவுகணைக்கு அப்பெயர் வைக்கப்பட்டது.

இது 2,000 கி.மீ., துார இலக்குகளையும் தாக்கக் கூடியது. 1,500 கிலோ வெடிபொருளுடன் விழுந்து வெடிக்கக்கூடியது. இதில், கூடுதல் வெடிபொருட்களை சேர்த்து ஈரான் அனுப்பியது.

இந்த தாக்குதலால் குடியிருப்புகள், வங்கிகள், பல்வேறு கடைகள் சேதமடைந்தன. சாலைகள் கட்டடக் குவியல்களால் துண்டிக்கப்பட்டன; 83 பேர் காயமடைந்தனர். அவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாடுகளுக்கு

எச்சரிக்கைஅமெரிக்காவின் செயல்கள் மிகவும் கொடூரமானவை. இது நிரந்தரமான விளைவுகளை ஏற்படுத்தும். ஐ.நா.,வின் ஒவ்வொரு உறுப்பு நாடும் மிகவும் ஆபத்தான, சட்டவிரோதமான மற்றும் இந்த குற்ற நடவடிக்கை குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஈரான் தன் இறையாண்மை, நலன்கள் மற்றும் மக்களைப் பாதுகாக்க எந்தவொரு நடவடிக்கைக்கும் தயாராக உள்ளது. - அப்பாஸ் அராக்சி ஈரான் வெளியுறவு அமைச்சர்



வழிவகுக்கும்

ஈரானின் அணுசக்தி தளங்களை அழித்த அமெரிக்காவின் நடவடிக்கையை யாராலும் மிஞ்ச முடியாது. பூமியில் வேறு எந்த நாட்டாலும் செய்ய முடியாததை அமெரிக்கா செய்துள்ளது. டிரம்பின் இந்த முடிவு வரலாற்றில் ஒரு திருப்புமுனையை உருவாக்கும். மேற்கு ஆசிய பிராந்தியத்தின் வளர்ச்சிக்கும், அமைதியான எதிர்காலத்திற்கும் இது வழிவகுக்கும்.- பெஞ்சமின் நெதன்யாகுஇஸ்ரேல் பிரதமர்



சேத நிலவரம்

நாடு பலி காயம்இஸ்ரேல் 24 650ஈரான் 865 3396இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நேற்று வரையிலான 10 நாள் தாக்குதலில் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோர் விபரம்.

Advertisement