ஊட்டி பூண்டு கிலோ ரூ.50 ஆக சரிவு

குன்னுார்: ஊட்டி பூண்டு விலை கடுமையாக வீழ்ச்சியடைந்து, கிலோ 50 -- 85 ரூபாய் வரை மட்டுமே விற்பனையாவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில், 1,500 ஏக்கர் பரப்பளவில் பூண்டு விவசாயம் நடக்கிறது. அதில், ஊட்டி, குன்னுார், கோத்தகிரி பகுதிகளில் அதிகம் விளைவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு இறுதியில், ஒரு கிலோ பூண்டு, 600 முதல், 1,000 ரூபாய் வரை விற்பனையானது.

கடந்த மார்ச்சில் இருந்து விலைச்சரிவு ஏற்பட துவங்கியது. 60 ரூபாய் முதல் அதிகபட்சம் 100 ரூபாய் வரை ஏலம் போனது. இந்நிலையில், மேட்டுப்பாளையம் ஏல மண்டியில் நடந்த ஏலத்தில், 50 முதல் 85 ரூபாய் வரை மட்டுமே ஏலம் போனது.

விவசாயி விஸ்வநாதன் கூறுகையில், ''ஊட்டி பூண்டுக்கு மதிப்பு அதிகம். நல்ல விலை கிடைத்து வந்த நிலையில், குஜராத், உத்தர பிரதேசம் மாநிலங்களில் அதிகரித்து வரும் பூண்டு உற்பத்தியால், நீலகிரியில் இருந்து வட மாநிலங்களுக்கு ஊட்டி பூண்டு செல்வதில்லை.

வரும் ஆக., மாதம் வட மாநில விவசாயிகள் பூண்டு மற்றும் விதை வாங்க ஊட்டிக்கு வருவர். அதன் பின், விலை ஏற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது,'' என்றார்.

Advertisement