முருக பக்தர்கள் மாநாடால் அரசியல் மாற்றம் உறுதி தமிழிசை நம்பிக்கை

அவனியாபுரம் : ''மதுரை முருக பக்தர்கள் மாநாடால் அரசியல் மாற்றம் ஏற்படுவது உறுதி'' என முன்னாள் கவர்னர் தமிழிசை தெரிவித்தார்.

முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்று சென்னை செல்ல மதுரை விமான நிலையம் வந்த அவர் கூறியதாவது:

கடந்த 50 ஆண்டு காலமாக ஹிந்துக்களின் மனதை புண்படுத்துவதும், ஹிந்துக்களின் கலாசாரத்தை உதாசீனப்படுத்துவதும் ஒரு வழக்கமாக இருந்து வந்தது. ஹிந்துக்களை எது பேசினாலும் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள் என்ற நிலை இருந்தது.

இம்மாநாட்டில் ஹிந்துக்களை பிரித்துப் பார்க்க, பரிசோதித்து பார்க்க முடியாது என்ற சக்தியை வெளிப்படுத்தி இருக்கிறோம்.

ஆன்மிகம் என்பது தமிழோடு இணைந்தது. தமிழ் என்பது ஆன்மிகத்தோடு இணைந்தது. 1967க்கு பின் ஆன்மிகத்துக்கும் தமிழுக்கும் சம்பந்தமில்லை. ஹிந்துக்கள் என்றால் திருடன் , கோயில் உண்டியல்களை காப்பாற்ற முடியாத கடவுள் எப்படி உங்களை காப்பாற்றுவார், கொசுவை அழிப்பது போல் சனாதனத்தை அளிப்பேன், ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்ல மாட்டோம் என்று உதாசீனம் செய்தவர்களுக்கு இம் மாநாடு மூலம் சரியான பாடம் புகட்டப்பட்டிருக்கிறது.

முருக பக்தர்கள் மாநாட்டில் அரசியல் பேசவில்லை. அரசியல் தீர்மானம் இல்லை. மிகப்பெரிய அரசியல் தலைவர்கள் பங்கெடுக்கவில்லை. ஆனால் அரசியல் மாற்றம் ஏற்படும் என்பது உறுதி என்றார்.

Advertisement