தக்கைப் பூண்டு விதை விலை உயர்வால் விவசாயிகள் அவதி

சிங்கம்புணரி : சிங்கம்புணரி பகுதியில் தக்கைப் பூண்டு விதைகளின் விலை உயர்ந்ததால் அவற்றை வாங்கி பயிரிட முடியாமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.

விவசாய நிலங்களில் மண்ணின் வளத்தை மேம்படுத்தவும், மண்புழுக்களை ஈர்க்கவும், மண்ணரிப்பை தடுக்கவும் விவசாயிகள் பயிர் சாகுபடிக்கு முன்பாக தக்கை பூண்டு சாகுபடி செய்து வருகின்றனர். இவை பசுந்தாள் உரமாகவும் பயன்படுத்தப்படுகிறது. இச்செடிகளை விதைத்த பிறகு ஒரு மாதத்தில் பயிர் வளர்ந்து விடும் பிறகு அதை அப்படியே உழுது மண்ணில் உரமாக்கி விடுகிறார்கள். இதனால் நிலத்தில் அடுத்து சாகுபடி செய்யப்படும் பயிருக்கு இயற்கை உரம் கிடைக்கிறது. சில ஆண்டுகளாக சிங்கம்புணரி தாலுகாவில் தக்கைப் பூண்டுகளை விவசாயிகள் பல இடங்களில் பயிரிட்டு உரமாக்கி வருகின்றனர். கடந்தாண்டு வேளாண்மை அலுவலகங்கள் மூலம் கிலோ 50 ரூபாய் மானியத்தில் விதை வழங்கப்பட்டது. அதே நேரம் கடைகளில் 70 முதல் 80 ரூபாய் விற்கப்பட்டது. இந்தாண்டு இன்னும் வேளாண்மை அலுவலகங்களுக்கு தக்கை பூண்டு விதை வரவில்லை. இதனால் விவசாயிகள் கடைகளை நாடத் துவங்கியுள்ளனர். வியாபாரிகள் 120 முதல் 150 ரூபாய் வரை விலை வைத்து விற்கின்றனர். அதனால் விவசாயிகள் கூடுதல் விலை கொடுத்து வாங்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே வேளாண்மைத் துறையினர் விவசாயிகளுக்கு தக்கைப் பூண்டு விதைகளை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

///

Advertisement