விழுப்புரம் - காட்பாடி இரட்டை ரயில் பாதை திட்டம்... செயல்படுத்தப்படுமா?

திருக்கோவிலுார்: விழுப்புரம் - காட்பாடி இடையே இரட்டை ரயில் பாதை திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காட்பாடியிலிருந்து திருப்பதி, சென்னை, விழுப்புரம், பெங்களூரு மற்றும் வடமாநிலங்களுக்கு ரயில்கள் இயக்கப்படுவதால், முக்கிய ஜங்ஷனாக உள்ளது. தென் மாவட்டங்களில் இருந்து வட இந்தியாவிற்குச் செல்லும் ரயில்கள் விழுப்புரம் - காட்பாடி மார்க்கத்தில் பயணிக்கிறது.

இந்த வழித்தடத்தில் விழுப்புரம் - புரூலியா, விழுப்புரம் - காரக்பூர், திருப்பதி - ராமேஸ்வரம், திருப்பதி - மன்னார்குடி, தாதர் - புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயில்களும், விழுப்புரம் - காட்பாடி பயணிகள் ரயில்கள் மற்றும் ஏராளமான சரக்கு ரயில்கள் இயக்கப்படுகிறது.

இதனால், விழுப்புரம் - காட்பாடி ரயில் பாதை முக்கிய வழித்தடமாக உள்ளது. தற்போது ஒரு வழி மின் பாதையாக இருப்பதை, இரட்டை வழித்தடமாக மாற்ற வேண்டும் என்பது ரயில் பயணிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

இதன் மூலம் தென் தமிழகத்திலிருந்து மத்திய மற்றும் வட இந்தியாவுக்கு ரயில் இணைப்பை மேம்படுத்த முடியும். இது தென் மாவட்ட ரயில் பயணங்களுக்கு பேருதவியாக இருக்கும்.

பயணிகளின் இக்கோரிக்கையை ஏற்ற தெற்கு ரயில்வே விழுப்புரம் - காட்பாடி இடையே 160 கி.மீ., துாரத்திற்கு இரட்டை பாதை அமைக்க, தெற்கு ரயில்வே கட்டுமானப் பிரிவு ஆய்வு செய்துள்ளது.

இந்நிலையில் 2025-26ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு 12 ரயில்வே திட்டங்களுக்காக 6,626 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் விழுப்புரம் - காட்பாடி இரட்டை ரயில் பாதை திட்டத்திற்கு 150 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் நிலையிலேயே பணிகள் ஆமை வேகத்தில் செயல்படுத்தப்படுவதால் நில ஆர்ஜிதம் உள்ளிட்ட பணிகள் தொடங்கவில்லை.

இதற்காக ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் பிற நிதி என தெற்கு ரயில்வே, ரயில்வே வாரியத்திற்கு திருப்பி அனுப்பியதாக தகவல் வெளியானது.

இதற்கு மறுப்பு தெரிவித்த தெற்கு ரயில்வே, நிதியை அடுத்த காலாண்டிற்கு மாற்றுவது தொடர்பான தகவல் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயில் நிதி பற்றாக்குறை இல்லை. தேவைக்கு ஏற்ப திட்டங்களுக்கு நிதி கிடைக்கிறது. காலாண்டுக்குள் முழுமையாக பயன்படுத்தப்படாத நிதி பிற திட்டங்களுக்கு மாற்றப்படுகிறது என விளக்கம் அளித்துள்ளது.

தென் மாவட்டம் மற்றும் விழுப்புரம் பகுதி ரயில் பயணிகளுக்கு முக்கிய வழித்தடமாக இருக்கும் விழுப்புரம் - காட்பாடி இரட்டை ரயில் பாதை திட்டத்திற்கு தெற்கு ரயில்வே முக்கியத்துவம் அளித்து செயல்படுத்த வேண்டியது அவசர அவசியமாகியுள்ளது. அதிகாரிகள் விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement