காற்றினிலே நோய் தீர்க்கும் மூலிகை தோட்டம்

இயற்கையை பாதுகாத்து அதை நாம் அடுத்த சந்ததியினரிடம் கையளிக்க வேண்டியது ஒவ்வொருத்தருக்கும் தலையாயக் கடமை. செயற்கை அதிக மிகுந்த இவ்வுலகில் மனிதன் தனது மன நிம்மதியை திரும்பப் பெறுவதற்காக இயற்கையை தேடி ஓடிக் கொண்டிருக்கின்றான். இயற்கை அன்னையை நாம் பாதுகாப்பதன் அவசியத்தை உணர்ந்து மரம் நடுவதும் அவற்றை பாதுகாப்பது முக்கியமான கடமை.
பசுமையைப் பேண மரக்கன்றுகள் நட வேண்டும். மரங்கள் தான் மனித சமுதாயத்திற்கு பல்வேறு பலன்களை அளிக்கின்றன. மரங்களும் அடர்ந்த காடுகளும் சுவாசத்திற்கு உதவுவதால் மரக்கன்றுகள் நடுவது அவசியம். மரங்கள் நமக்கு நிழல் அளிப்பதுடன், இதமான காற்றினையும் அளிக்கிறது. இதற்காக அரசு பள்ளி கல்லுாரிகளில் மரங்களில் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
வகுப்பறை மாற்றமே நமது சமுதாயத்தின் மாற்றம் என்பதற்கு ஏற்ப மாணவர்கள் மனதில் நமது இயற்கை அன்னையை பாதுகாப்பதன் அவசியம் உணர்த்தி மரம் நடுவதும் அவைகளை பாதுகாப்பதும் இன்றைய காலத்தில் எவ்வளவு முக்கியமான செயல் என்பதையும் உணரச் செய்ய வேண்டும். அந்த வகையில் சிவகாசி எஸ்.எப்.ஆர் மகளிர் கல்லுாரியில் ஆயிரக்கணக்கான மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. கல்லுாரி வளாகத்தில் மா, கொய்யா, வேம்பு, ருத்ராட்சை என பல்வேறு வகையான மரக்கன்றுகளை மியா வாக்கி முறையில் நட்டு பாதுகாக்கின்றனர்.
இதனால் கல்லுாரி வளாகமே பசுமையாக காட்சியளிக்கிறது. மேலும் மற்றொரு சிறப்பாக கல்லுாரி வளாகத்தில் மூலிகை தோட்டம் பராமரிக்கப்பட்டு வருகின்றது.இதில் துளசி கீழாநெல்லி, குப்பைமேனி உள்ளிட்ட பல்வேறு வகையான மூலிகை செடிகள் உள்ளது.
இந்த தோட்டத்தை கடந்து சென்றாலே எந்த நோயாகினும் சரியாகி விடும். மேலும் நவகிரக தோட்டம் மற்றொரு சிறப்பு. சூரியன், சந்திரன் உள்ளிட்ட ஒன்பது நவக்கிரகங்களுக்கும் அதற்குரிய மரங்களான கருங்காலி, நாயுருவி என ஒன்பது வகையான மரங்கள் வளர்க்கப்படுகிறது. இதை தவிர மாணவிகளின் மனம் உடல் திறனை மேம்படுத்தும் வகையில் பூங்கா ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஊஞ்சல், இருக்கைகள், உடற்பயிற்சி மேற்கொள்ளும் உபகரணங்கள் என பலவும் உள்ளது.
கார்த்திகை செல்வி, மாணவி: கல்லுாரி வளாகம் முழுவதுமே மரங்களாக இருப்பதால் இயற்கை சூழலில் உள்ள மனநிலை ஏற்படுகிறது. எவ்வளவு கோடை என்றாலும் இங்கு வெயிலின் தாக்கம் தெரிவதில்லை. தேர்வு நேரத்தில் மரங்களின் அடியில் அமர்ந்து படிப்பதால் எளிதில் பாடங்கள் புரிகிறது. மழை பெறுவதற்கு எப்படி மரங்கள் அவசியமோ அதே போல் சுத்தமான காற்று கிடைக்கவும் மரங்கள் அவசியம். மாசில்லாத நகரை உருவாக்க வேண்டும் என்றால் மரங்களை கண்டிப்பாக பராமரிக்க வேண்டும்.
யோகேஸ்வரி, மாணவி: கந்தக பூமியை பசுமையாக மாற்றும் நோக்கில் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் பசுமையான வளாகத்தைக் கொண்ட கல்லுாரியாக விளங்குகிறது. தோட்டக்கலை, மழை நீர் சேகரிப்பு, மின்னணு கழிவு மேலாண்மை போன்ற செயல்பாடுகள் மூலம் சுற்றுச் சூழலை மாசுபடுத்தாத வண்ணம் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மேலும்
-
மாணவர்கள் உயர்கல்வி பயில சிறப்பு முகாம்
-
ஆடவள் அரங்கம்
-
பல்வேறு தொழில்களில் அசத்தும் 4 பெண் தொழில் முனைவோர்
-
மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க பேராசிரியையின் நுாதன விளம்பரம்
-
விழுப்புரம் - காட்பாடி இரட்டை ரயில் பாதை திட்டம்... செயல்படுத்தப்படுமா? இரண்டு மாவட்ட ரயில்வே பயணிகள் எதிர்பார்ப்பு
-
பா.ஜ., நிர்வாகிகள் போலீசார் வாக்குவாதம்