மாணவர்கள் உயர்கல்வி பயில சிறப்பு முகாம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில், மாணவர்கள் உயர்கல்வி பயில்வதற்கான சிறப்பு முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மாவட்டத்தில் பள்ளிப்படிப்பை முடித்த மாணவர்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில், மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் பங்கேற்று உயர்கல்விக்கு தேவையான கோரிக்கை மற்றும் தகவல்கள் தொடர்பாக மனுக்களை வழங்கினர்.

தொடர்ந்து கல்லுாரி படிப்பை தொடர நிதியுதவி, விடுதி வசதி, படிப்பை தேர்ந்தெடுத்தல், முதல் பட்டதாரி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் உள்ளிட்டவைகளை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

மேலும், பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உயர்கல்வி பயில்வதற்கும், தோல்வியுற்ற மாணவர்கள் சிறப்பு துணை தேர்வு எழுதுவது குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது.

தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில், கல்லுாரி மாணவ மாணவியருக்கு செயல்படுத்தும் சிறப்பு திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டன. பள்ளி படிப்பை முடித்த அனைத்து மாணவர்களும் கல்லுாரி படிப்பு பயின்று வாழ்வில் வெற்றியடைய கலெக்டர் வாழ்த்துக்களை தெரிவித்தார். இதில் சி.இ.ஓ., கார்த்திகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement