மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க பேராசிரியையின் நுாதன விளம்பரம்

அரசு பணியில் இருக்கும் சிலர், தங்கள் பணியை மட்டுமே கவனிப்பது சகஜம். சரியாக பணியாற்றாமல், நாற்காலியை தேய்த்துவிட்டு அரசிடம் ஊதியம் பெறும் சில ஊழியர்களும் உள்ளனர். இத்தகையோருக்கு இடையே, தங்களால் மற்றவருக்கும், சமுதாயத்துக்கும் பயன் கிடைக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் பணியாற்றும் அரசு ஊழியர்களும் உள்ளனர். இவர்களில் பேராசிரியை வேதஸ்ரீயும் ஒருவர்.

தட்சிண கன்னடா மாவட்டம், புத்துார் தாலுகாவின், அரசு பி.யு.சி., கல்லுாரியில் பொருளாதார துறை பேராசிரியையாக பணியாற்றுபவர் வேதஸ்ரீ. தான் பணியாற்றும் கல்லுாரியில் மாணவர் எண்ணிக்கை குறைந்து வருவதை பார்த்து வருத்தம் அடைந்தார். இந்த கல்லுாரியில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க செய்ய, தன்னால் முடிந்த முயற்சியை செய்ய விரும்பினார். தன் காரையே விளம்பர சாதனமாக பயன்படுத்தினார்.

மனப்போக்கு



குறைந்த கட்டணத்தில் மாணவர்கள் தரமான கல்வி பெறட்டும் என்ற நோக்கில் தன் காரில் கல்லுாரி பற்றிய விபரங்களை வெளியிட்டு, விளம்பரம் செய்து வருகிறார். எங்கு சென்றாலும், வேதஸ்ரீ இதே காரில் பயணிக்கிறார்.

இதில் உள்ள விளம்பரத்தால் ஈர்க்கப்பட்டு, மாணவர்கள் சேர்கின்றனர். இதனால் புத்துார் பி.யு.சி., கல்லுாரியில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இவர், இதுபோன்று சேவை செய்வது, இதுவே முதன் முறையல்ல. இதற்கு முன் பன்ட்வால் அரசு கல்லுாரியில், பேராசிரியையாக பணியாற்றிய போது, மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சித்தார். இதற்கு நல்ல பலனும் கிடைத்தது.

தனியார் பள்ளி, கல்லுாரிகள் வெவ்வேறு ஊடகங்களில், தங்களின் கல்வி நிறுவனங்கள் குறித்து விளம்பரம் செய்கின்றனர். ஆனால் அரசு கல்வி நிறுவனங்கள் பற்றி, விளம்பரம் செய்வது இல்லை. தனியார் பள்ளிகளை விட, அரசு பள்ளி, கல்லுாரிகளில் அதிகமான சலுகைகள் கிடைக்கின்றன. தரமான கல்வியும் கிடைக்கிறது. ஆனால் இது பற்றி விளம்பரம் செய்து, மாணவர்களை ஈர்ப்பதில் அதிகாரிகளுக்கு அக்கறை இல்லை.

எண்ணிக்கை



இதன் விளைவாக படிப்படியாக மாணவர் எண்ணிக்கை குறைகிறது. அரசு பள்ளிகள் ஒவ்வொன்றாக மூடப்படுகின்றன. அது போன்று நடக்க கூடாது என்பது, பேராசிரியை வேதஸ்ரீயின் எண்ணமாகும். மாணவர்களே இல்லாத கல்லுாரியில், பேராசிரியர் இருந்து என்ன பயன் என்பதை உணர்ந்த அவர், மாணவர்களை அரசு கல்லுாரிக்கு ஈர்க்க, தன் காரையே விளம்பர சாதனமாக பயன்படுத்துகிறார். இவரது சேவை மற்றவருக்கு முன் உதாரணமாக அமைந்துள்ளது.





- நமது நிருபர் -

Advertisement