கல்லுக்கட்டி ரோட்டில் ஆக்கிரமிப்பால் நெரிசல்

காரைக்குடி : காரைக்குடி கல்லுக்கட்டி அம்மன் சன்னதி சாலை, ஆக்கிரமிப்புகளாலும், விதிமுறைகளை மீறி நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

காரைக்குடி மாநகராட்சியில் உள்ள கல்லுக்கட்டி, அம்மன் சன்னதி பகுதிக்கு காரைக்குடி மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் வந்து செல்கின்றனர். துணிக்கடைகள், நகைக்கடைகள் அதிகம் உள்ளதால், திருமணம் உள்ளிட்ட விசேஷங்களுக்கு நகை, ஜவுளி எடுப்பதற்காக மக்கள் கூட்டம் எப்போதும் அலை மோதுகிறது. பரபரப்பாக காட்சியளிக்கும் இப்பகுதியின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது. குறுகிய சாலையான, இச்சாலையின் இருபுறமும் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்லக்கூட முடியாத நிலை ஏற்படுகிறது. போலீசார் ஆக்கிரமிப்புகளை அகற்றி, விதிமுறைகளை மீறி நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களை தடுத்து போக்குவரத்து நெரிசலை சரி செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது.

Advertisement