இன்று முதல் 28ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு

சென்னை:'தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்று முதல், 28ம் தேதி வரை, லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கை:

தமிழகத்தில் நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், சில இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக, நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில், 2 செ.மீ., மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, கோவை மாவட்டம் சின்னக்கல்லார், வால்பாறை, சின்கோனா, திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு, வேலுார் மாவட்டம் பொன்னை அணை போன்ற பகுதிகளில், தலா ஒரு செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல் 28ம் தேதி வரை, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும், 26ம் தேதி வரை, அதிகபட்ச வெப்ப நிலையில் மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.

சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில், லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழக கடலோர பகுதிகளில், வரும் 26ம் தேதி வரை, மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவுமில்லை.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement