தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு கலெக்டர் தலைமையில் ஆய்வு கூட்டம்

கள்ளக்குறிச்சி : தென்மேற்கு பருவமழையொட்டி முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள, துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடந்தது. மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். கலெக்டர் பிரசாந்த் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் தென்மேற்கு பருவ மழை காலங்களில் புயல் பாதுகாப்பு மையங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

குடிநீர் தட்டுபாடு ஏற்படாமல் மின்சார வாரியத்துடன் இணைந்து போதிய குடிநீர் விநியோகம் வழங்கிட வேண்டும்.

அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேவையான மருந்து, மாத்திரைகள் இருப்பில் வைக்க வேண்டும். அணை, ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளின் அளவுகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

வருவாய் கோட்டங்கள், தாலுகா அலுவலங்களில் கட்டுபாட்டு அறைகள் அமைத்து 24 மணி நேரமும் சுழற்சி முறையில் அலுவலர்களை நியமனம் செய்து கண்காணித்திட வேண்டும். தென்மேற்கு பருவமழை பேரிடர் காலங்களில் துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

டி.ஆர்.ஓ., ஜீவா, சப் கலெக்டர் ஆனந்த்குமார்சிங், திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், கூட்டுறவுத் துறை இணைப்பதிவாளர் முருகேசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement