அகோபிலமடம் ஜீயர் திருநட்சத்திர விழா ஸ்ரீரங்கத்தில் கோலாகலம்

திருச்சி : ஆசியாவின் மிக உயர்ந்த ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ராஜகோபுரத்தைக் கட்டுவித்த அகோபிலமட பரம்பரையில் 46வது பட்டம், ஸ்ரீலட்சுமி நரசிம்ம திவ்யபாதுகாசேவக ஸ்ரீவண்சடகோப ஸ்ரீரங்கநாத யதீர்ந்திர மகாதேசிகன் ஜீயர் சுவாமிகளின் 70வது திருநட்சத்திர பூர்த்தி விழா 30ம்தேதி கொண்டாடப்படுகிறது.
இதை முன்னிட்டு, திருநட்சத்திர பூர்த்தி விழா ஸ்ரீரங்கம் தசாவதார சன்னதி அகோபிலமடத்தில் 20ம்தேதி தொடங்கி விமரிசையாக நடந்து வருகிறது. தினமும் மாலை, நாட்டிய நாடகங்கள் நடந்து வருகிறது. 24ம்தேதி நரசிம்மர் ஆன்மிக நாடகம், 25 முதல் 28ம்தேதி வாய்ப்பாட்டு நிகழ்ச்சிகள், 29ம்தேதி நாம ஸங்கீர்த்தன வைபவம் நடைபெறவுள்ளன. ஜீயர் சுவாமிகள், 71 மஹா வித்வான்களை சன்மானம் வழங்கி 24ம்தேதி கவுரவப்படுத்துகிறார்.
மகோத்சவத்தின், முக்கிய நிகழ்ச்சியாக, வேத பாராயணம் 25ல் தொடங்கி 29ம்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. நான்கு வேதங்கள் மற்றும் அவற்றின் அனைத்து உட்பிரிவுகளையும் பாராயணம் செய்ய உள்ளனர்.
நாடு முழுவதும் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேத விற்பன்னர்கள் பங்கேற்கின்றனர். 29ம்தேதி மாலை, ஸ்ரீரங்கம் திருவீதிகளில் ஜீயர் சுவாமிகளின் பட்டினப்பிரவேசம் நடைபெற உள்ளது.
30ம்தேதி ஜீயர் சுவாமிகள் திருநட்சத்திரப் பூர்த்தி மகோத்வசம் நடக்கிறது. சோழ, பாண்டிய, தொண்டை, வட மற்றும் நடு நாடுகளில் உள்ள வைணவ திவ்ய தேசங்களில் இருந்தும், அகோபில மடம் ஆதீனத்துக்குட்பட்ட கோவில்களில் இருந்தும் பிரசாதங்கள் சுவாமிக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளன. தொடர்ந்து, பக்தர்களுக்கு ஜீயர் சுவாமிகள், ஸ்ரீபாத தீர்த்தம் வழங்க உள்ளார். அன்று மாலை, 71 வித்வான்கள் கலந்து கொள்ளும் பஞ்சரத்ன கீர்த்தனை கோஷ்டி கானம் நடைபெற உள்ளது. இதில், சிஷ்யர்கள், பக்தர்கள் கலந்து கொள்ள விழா ஒருங்கிணைப்பாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். ஜீயரின் திருநட்சத்திர மகோத்சவத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கம் வடக்குவாசல் பகுதிகள் விழாக்கோலம் பூண்டுள்ளன.