முப்படைகளின் பின்னால் மக்கள் உள்ளனர்; கவர்னர் ரவி

சென்னை: ''ராணுவத்தின் பின்னால் நாடு உள்ளது. அதனால், இந்திய தேசியக் கொடி ஒரு போதும் கீழிறங்காது,'' என, தமிழக கவர்னர் ரவி பேசினார்.


'ஆபரேஷன் சிந்துார்' நடவடிக்கையில் பங்கேற்ற முப்படையினருக்கு, பொதுமக்கள் சார்பில் பாராட்டு நிகழ்ச்சி, நேற்று சென்னை ஐ.ஐ.டி., வளாகத்தில் நடந்தது.


நிகழ்ச்சியில், போரில் பயன்படுத்தப்பட்ட, துப்பாக்கிகள், பீரங்கிகள், விக்ராந்த் போர்க்கப்பல், ட்ரோன் போன்றவற்றின் மாதிரிகள் கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தன.


ஆப்பரேஷன் சிந்துாரில் பங்கேற்ற, முப்படை அதிகாரிகளுக்கு, நினைவுப்பரிசு வழங்கி, கவர்னர் ரவி பேசியதாவது:



உலகில், ரஷ்யா - உக்ரைன், இஸ்ரேல் - ஹமாஸ், இஸ்ரேல் - ஹிஸ்புலா, இஸ்ரேல் - ஈரான் என, போர் நடந்து கொண்டே இருக்கிறது.



போர் துவங்கிய 88வது மணி நேரத்தில், 'ஆப்பரேஷன் சிந்துார்' முடிவுக்கு வந்தது. காரணம், அது நிர்ணயித்த இலக்கு.



இந்தியாவுக்கு இலக்கு தெளிவாகவும், பெரிதாவும் இருந்தது. அதை தீவிரமாகவும், துல்லியமாகவும் செயல்படுத்தும் திறன் இருந்ததால், 88வது மணி நேரத்தில் ஆப்பரேஷன் சிந்துார் முடிவுக்கு வந்தது.



போர் முடிவுக்கு வந்தாலும், நம் நடவடிக்கைகள் குறித்து, பல அத்தியாயங்கள் சொல்லவும், எழுதவும் செய்திகள் உள்ளன.



ஆப்பரேஷன் சிந்துாருக்கு முன் இருந்த மனநிலையும், நம்பிக்கையும், ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் மாறி உள்ளது. பாகிஸ்தானிடம் மட்டுமின்றி, இந்திய குடிமக்களிடமும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.


பாகிஸ்தான் தன் படைகளின் வாயிலாக, சாதிக்க முடியாதவற்றை, பயங்கரவாதிகள் வாயிலாக சாதிக்க நினைத்தது. அது, இந்தியாவுக்கு பெரும் தலைவலியாக இருந்தது.



ஒவ்வொரு பயங்கரவாத தாக்குதலின் போதும், முப்படையினரை அழைத்து, அரசியல் தலைவர்கள் பேசுவர். ஆனால், எந்தவித முடிவையும் எடுக்க முடியாமல் தடுமாறுவர்.



ஆனால், பஹல்காம் தாக்குதல் நடத்தப்பட்டதை அறிந்த பிரதமர், வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்து நாடு திரும்பினார். சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தினார்.



நம் நாட்டில், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்கள், தண்ணீர் பற்றாக்குறையால் தவிக்கும்போது, 1960களில், நம் தலைவர்கள், ஓர வஞ்சனையாக, நம் நாட்டிலிருந்து செல்லும் சிந்து நதி நீரை, பாகிஸ்தானுக்கு வழங்க சம்மதித்தனர்.



தற்போதைய பிரதமர், நம் நதி நீரை, தைரியமாக நிறுத்தினார். அடுத்து, முப்படையினருடன் ஆலோசிக்கப்பட்டது.



ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டது. பாதுகாப்பு துறையினருக்கு, சுதந்திரம் வழங்கப்பட்டது. பயங்கரவாதிகளை அழிப்பது, குறிக்கோளாக நிர்ணயிக்கப்பட்டது. முப்படைகளும் ஒரே திசையில் இயங்கின.



நான், தமிழகத்துக்கு வந்தபோது, வேலுார் அருகில் ஒரு கிராமத்துக்கு சென்றேன். அதன் பெயர் 'ராணுவப்பேட்டை' என்றிருந்தது. அப்படிப்பட்ட மண் தமிழகம். ஆப்பரேஷன் சிந்துாரின் போது, நான் சென்ற இடங்களில் எல்லாம், சாதாரண குடிமக்களும், நாட்டுப்பற்றுடன், இந்திய படைகளின் நடவடிக்கைகளை புகழ்ந்து பேசினர்.


பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள், பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில், தனியாக பங்கேற்கவில்லை.



அவர்களுக்கு பின் நாட்டு மக்கள் இருந்தனர். இனிமேலும் இருப்பர். உங்களுக்கு பின் நாடு உள்ளது. அதனால், இந்திய தேசியக்கொடி ஒரு நாளும் கீழே இறங்காது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement