பயிர் காப்பீடு செய்தும் இழப்பீடு கிடைக்கவில்லை! மக்காச்சோள விவசாயிகள் வேதனை

உடுமலை : 'மக்காச்சோள சாகுபடியில், காட்டுப்பன்றிகளால் ஏற்பட்ட சேதத்துக்கு இழப்பீடு வழங்க காப்பீடு நிறுவனங்களுக்கு அரசு உரிய வழிகாட்டுதல் வழங்காததால், இழப்பீடு கிடைக்காமல் பல ஆயிரம் விவசாயிகள் பாதித்துள்ளனர் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை சுற்றுப்பகுதிகளில் கடந்தாண்டு, பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்துக்கு, 40 ஆயிரம் ஏக்கர் வரை, மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டது.
இந்தாண்டு, ஜன., மாதத்தில் அறுவடை துவங்கிய நிலையில், காட்டுப்பன்றிகளால், இச்சாகுபடியில், கடும் சேதம் ஏற்பட்டது. பயிர், கதிர்களை அவை சேதப்படுத்தியதால், ஏக்கருக்கு, சராசரியாக, 500 கிலோ முதல் ஆயிரம் கிலோ வரை மக்காச்சோளம் இழப்பு ஏற்பட்டது.
பயிர் சேதம் மற்றும் மகசூல் இழப்பை ஈடுசெய்யும் வகையில், காப்பீடு செய்த விவசாயிகளுக்கு, இழப்பீடு தொகை வழங்க கோரிக்கை எழுந்தது. ஆனால், காப்பீடு நிறுவனத்தினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இது குறித்து, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், தமிழக முதல்வருக்கும் மனு அனுப்பினர்.
இதையடுத்து காப்பீடு நிறுவனங்கள் தரப்பில், வேளாண்துறை வாயிலாக, விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
அதில், ' திருப்பூர் மாவட்டத்தில், மக்காச்சோளம் சாகுபடியில் வனவிலங்கு தாக்குதல் குறித்த கூடுதல் காப்பீட்டை தமிழக அரசு அறிவிக்கவில்லை. மகசூல் பாதிப்புக்கான இழப்பீடு குறித்த கோரிக்கைகளுக்கு, 2024-25 ராபி பருவ சராசரி மகசூல் மற்றும் தொடக்க மகசூல் தரவுகளை தமிழக அரசு வெளியிடாததால், பரிசீலிக்க இயலவில்லை,' என குறிப்பிட்டுள்ளனர். இதனால், விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கூறியதாவது: மக்காச்சோள சாகுபடியில், காட்டுப்பன்றிகளால் தொடர் பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. சேதத்துக்கு, வனத்துறை வாயிலாகவும் தமிழக அரசு நிவாரணம் வழங்கவில்லை; சராசரி மகசூல் குறித்த தரவுகளை வேளாண்துறையிடம் பெற்று தமிழக அரசு குறித்த நேரத்தில் சமர்ப்பிக்காததால், காப்பீடு செய்தவர்களுக்கும் பலன் கிடைக்கவில்லை. இதனால், திருப்பூர் மாவட்டத்தில் பல ஆயிரம் விவசாயிகள் பாதித்துள்ளனர்.
இவ்வாறு, தெரிவித்தனர்.
மேலும்
-
தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு கலெக்டர் தலைமையில் ஆய்வு கூட்டம்
-
மாணவர்கள் உயர்கல்வி பயில சிறப்பு முகாம்
-
ஆடவள் அரங்கம்
-
பல்வேறு தொழில்களில் அசத்தும் 4 பெண் தொழில் முனைவோர்
-
மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க பேராசிரியையின் நுாதன விளம்பரம்
-
விழுப்புரம் - காட்பாடி இரட்டை ரயில் பாதை திட்டம்... செயல்படுத்தப்படுமா? இரண்டு மாவட்ட ரயில்வே பயணிகள் எதிர்பார்ப்பு