திருப்புத்தூரில் குடிநீர், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பாட்டிற்கு வருமா

திருப்புத்தூர் : திருப்புத்தூரில் முடங்கிய கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் செயல்படுத்த பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

திருப்புத்தூர் நகரில் குடிநீர் மற்றும் கழிவு நீர் பிரச்னைக்கு தீர்வாக மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மற்றும் பேரூராட்சி இணைந்து ரூ.12 கோடியில் குடிநீர் மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் துவக்கப்பட்டது. 2012 ல் இத்திட்டத்தை தனியார் நிறுவனமான வாட்டர் இந்தியா பி. லிட்., நிறுவனத்தினர் பராமரித்து செயல்படுத்தினர். இத்திட்டத்தில் குடிநீர் விநியோகத்துடன் தினசரி 8 லட்சம் லி. கழிவு நீர் சுத்திகரிப்பும் நடந்தது. நிர்வாக காரணங்களால் 4 ஆண்டுகளுக்குப் பின் இத்திட்டம் முடங்கியது. தற்போது திருப்புத்தூரில் புதிய குடிநீர்த் திட்டம் அம்ரூத் 2.0 விரைவில் செயல்பட உள்ளது. அனைத்து வீடுகளுக்கும் இணைப்பு வழங்கியுள்ளதால் வழக்கத்திற்கு அதிகமாக கழிவு நீர் வெளியேறும். இதனால் நகரில் ஏற்படும் சுகாதாரக் கேட்டை தவிர்க்க கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். முடங்கியுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் உரக்கிடங்கு அருகே உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். நகர் முழுவதுமிருந்து அட்டக்குளத்திற்கு வரும் கழிவுநீரை வடிகட்டி, நீரேற்றும் அமைப்பு மூலம் உரக்கிடங்கிலுள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பி சுத்திகரிக்கும் திட்டத்தை பேரூராட்சி நிர்வாகம் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

///

Advertisement