முருகன், சிவன் ஹிந்துவா? சீமானுக்கு வந்த திடீர் சந்தேகம்

39

சென்னை: முருகன், சிவன் கடவுள்கள் ஹிந்துவா என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.



சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களை சந்தித்தார். அப்போது சீமானிடம் ஆங்கிலம், ஹிந்தி மொழி குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா கருத்து, முருக பக்தர்கள் மாநாடு பற்றி நிருபர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.


இதற்கு சீமான் பதிலளித்து கூறியதாவது;


ஆங்கில மொழி குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறிய கருத்துக்கு அவரின் கூட்டணியில் அ.தி.மு.க., உள்ளதால் இபிஎஸ் எதிர் கருத்து கூற முடியாது. ஆங்கிலத்தை புறம்தள்ள முயற்சிப்பது என்பது ஹிந்தியை முன்னிலைப்படுத்தத்தான்.


ஐரோப்பிய நாடுகளில் எந்த நாட்டிலும் ஆங்கிலம் இல்லை. பிரான்ஸ் என்றால் பிரெஞ்ச் என அவரவர் மொழியில் இருப்பர். தொடர்புக்கு கூட ஆங்கிலத்தை பயன்படுத்த மாட்டார்கள். நாம் அதை தொடர்பு மொழியாக, கெடுவாய்ப்பாய் இந்த ஆங்கில மொழி தேவைப்படுகிறது.


இப்போது இவர்கள்(பா.ஜ.,) அவர்களின் தாய்மொழியை கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறார்கள். மும்மொழியை ஏற்போம் என்றால் எம்மொழி எங்கே இருக்கிறது. மும்மொழியை ஏற்க முடியவில்லை, இங்கு அதுதான் பிரச்னை.


நம்முடைய கோட்பாடு என்பது கொள்கை மொழி என்பது அவரவருக்கு அவரவர் தாய்மொழி தான் இருக்க வேண்டும். தொடர்பு மொழி அல்லது பயன்பாட்டு மொழியாக ஆங்கிலம் என வைக்கலாம். ஆனால் அதையும் கொள்கை மொழியாக வைக்கக்கூடாது.


பெற்றவள் ஒருத்தியாகத்தான் இருக்க முடியாது. எனக்கு பெற்றவள் தமிழ். உனக்கு தெலுங்கு என்று வைத்துக் கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு, இந்தியை கொண்டு வரவேண்டும் என்று நினைக்கின்றனர். அந்த முயற்சியில் இந்த நாடு எவ்வளவு பின்னடைவை சந்திக்க போகிறது? தேச ஒற்றுமைக்கு, இறையாண்மைக்கு எவ்வளவு இடையூறு வரப்போகிறது என்பதை பார்க்கத்தான் போகிறோம்.


வள்ளுவர் கோட்டம் இருக்கிறது, சிலை இருக்கிறது. ஆனால் குறள் படிக்க ஒரு கூடம் இருக்கிறதா? குறள் படித்து அதன் வழி நடக்க இன்றைக்கு ஒரு வாய்ப்பு இருக்கா? வள்ளுவர் தந்த வாழ்வியல் நெறிமுறை உலகத்தில் வேறு எங்காவது இருக்கா?


அதுக்கு வாய்ப்பில்லை. தமிழ் படிக்கவே வாய்ப்பில்லாத ஒரு சூழலை உருவாக்கி விட்டு, அரசு பள்ளியில் தான் இருந்தது. இப்போது அதையும் ஆங்கில வழியாக மாற்றிவிட்டீர்கள்.


முதலில் ஹிந்துக்கும், முருகனுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? யாராவது சொல்லுங்க, முருகன் ஹிந்துவா? நான் கேட்பதற்கு யாராவது பதில் சொல்லுங்க? சிவன் ஹிந்துவா? சிவன், முருகன் ஹிந்துவா? சொல்லுங்க.


அரசியலில் என்ன செய்வது என்று உங்களுக்கு தெரியவில்லை. எனவே எங்களின் இறையை எடுத்து வள்ளுவனுக்கு காவியை போட்டு பார்த்தீர்கள்... அது எடுபடவில்லை. இப்போது வேலை தூக்கி பார்க்கிறீர்கள்.

ஹிந்து மாநாடு போடறீங்க? எத்தனை மாநாடு போட்டாலும் நீங்க எடப்பாடி பின்னாடி தான் போய் நிக்கணும். அவரே (இ.பி.எஸ்.,) சொல்கிறார்.. நானே ஒரு முருக பக்தன், என் பேரே பழனிசாமி என்று.


முருகனை கும்பிட்டு அந்த பழனிசாமி (இ.பி.எஸ்.,) பின்னாடி தான் போய் நிக்கணும். சரிதானே?


இவ்வாறு சீமான் பேசினார்.

Advertisement