நெற்றியில் பூசிய திருநீறை அழித்தது ஏன்; திருமாவளவன் சொல்வது இதுதான்!

சென்னை: திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நெற்றியில் பூசிய திருநீற்றை அழித்தது சர்ச்சைக்குள்ளான நிலையில், அது குறித்து வி.சி.க., தலைவர் திருமாவளவன் விளக்கம் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு;
திருப்பரங்குன்றத்துக்கு நான் சென்றிருந்தேன். தோழர்களின் அழைப்பை ஏற்று, முருகன் கோவிலில் வழிபாடு செய்தேன். அங்கு 30 ஆண்டுகளுக்கு முன் ஒருமுறை சென்றது எனக்கு நினைவிருக்கிறது. அப்போது நான் மதுரையில் தடயவியல் துறையில் பணியாற்றிக் கொண்டு இருந்த காலம்.
மீண்டும் அந்த கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆர்வம் எழுந்தது, சென்றேன். இப்போது கோவிலை சீர்செய்து கொண்டு இருக்கிறார்கள், மறு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆகவே கருவறைக்குள் இருக்கிற, அந்த குடவறை கோவிலாக உள்ள அந்த குகையில், முருகனை பார்க்க இயலவில்லை.
வெளியே ஒரு இடத்தில் அவர்கள் ஏற்பாடு செய்து வைத்திருக்கிற முருகன், தெய்வானை உள்ளிட்ட இதர தெய்வங்களை தரிசனம் செய்ய அனுமதித்தார்கள். பூஜை செய்து எனக்கு திருநீறு பூசினார்கள். கழுத்தில் எனக்கு மாலை அணிவித்தார்கள். தலையில் பரிவட்டம் கட்டினார்கள்.
உடன் வந்த அனைவரும் முருகனை தரிசித்தோம். ஏறத்தாழ ஒரு மணி நேரம் கோவிலுக்குள் இருந்தோம். ஏராளமானோர் என்னோடு படம் எடுத்துக் கொண்டார்கள். தூய்மை பணியாளர்களாக பணியாற்றிக் கொண்டு இருக்கிற பெண்கள் பல பேர், என்னோடு படம் எடுத்துக் கொண்டார்கள்.
எல்லாம் முடிந்து நான், வெளியே வாசலுக்கு வந்த போது, ஒரு புதுமணத்தம்பதி செல்பி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்ட போது, நானாக வாங்கி எடுத்தேன். அவர்களே எடுக்க முயற்சித்த போது, நானே செல்பி எடுத்தேன்.
அப்போது நெற்றியை நான், துடைத்தேன். அது வழக்கமான ஒன்று. திருநீறை பார்த்து துடைக்கவில்லை. நெற்றியில் வியர்வை இருந்தால் வழக்கமாக நான் தலையை இப்படி (வலது கையை இடதுபுறம் கொண்டு சென்று நெற்றியில் இருப்பதை அழிப்பது போன்று கையால் செய்து காட்டுகிறார்) துடைப்பது வழக்கமானது.
எந்த உள்நோக்கமும் இல்லாமல் சரிசெய்தேன் அல்லது துடைத்தேன். இதை வைத்துக் கொண்டு ஒரு வாரகாலமாக கடுமையாக விமர்சித்துக் கொண்டு இருக்கின்றனர். அதை பற்றி நாம் கவலைப்படவில்லை என்றாலும் கூட, என் தலைமையை ஏற்றுக் கொண்டிருக்கிற கட்சியினர், என் மீது நம்பிக்கை உள்ள பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சொல்கிறேன்.
ஒரு மணிநேரம் திருநீறை நெற்றியில் வைத்துக் கொண்டு இருந்த நான், வண்டியில் ஏறுகிறபோது அதை துடைத்தேன் என்றால் அது எப்படி ஹிந்துக்களை அவமதித்தது ஆகும்? அல்லது ஹிந்துக்கள் மனதை புண்படுத்தியதாகும்?
அது எனக்கு உடன்பாடில்லை என்றால் வைக்கும் போதே அதை தவிர்த்திருக்க முடியும். கையிலே நான் வாங்கிக் கொண்டால் போதும். பூசாரிகள் யாரும் நெற்றியில் வைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது இல்லை. பொதுவாக கோவில்களில் கருவறையில் பூஜை செய்யக்கூடியவர்கள் திருநீறை அள்ளி கைகளில் தூக்கி போடுவார்கள். சில இடங்களில் தான் திருநீறை நெற்றியில் பூசுவார்கள்.
ஆகவே கையை நான் நீட்டினால் என் கையிலே திருநீறை கொடுத்துவிட போகிறார்கள். நான் அதை பூசிக் கொள்ளாமலே கூட தவிர்த்திருக்க முடியும். எந்த கோவிலிலும் நான் அப்படி செய்வது இல்லை. சில இடங்களில் நானே பூஜை தட்டை வாங்கி கற்பூரம் ஏற்றி, அவர்கள் செய்கிற பூஜை வேலையை நானே செய்வேன்.
எனக்கு அதிலே ஒரு ஈடுபாடு உண்டு, ஆர்வம் உண்டு. புண்ணியம் கிடைக்க வேண்டும் என்பதற்காக திருநீறு பூசுவதும் இல்லை. அப்படி பூசி இருந்தால் அது எனக்கு ஏற்படையது இல்லை என்கிற எண்ணமும் எனக்கு இல்லை. அதை அழிக்க வேண்டும் என்கிற உள்நோக்கமும் கிடையாது.
என் மீது நம்பிக்கை உள்ளவர்கள் என்னை அழைத்து எனக்கு சிறப்பு செய்கிறபோது அவர்களின் உணர்வை மதிக்க வேண்டும் என்கிற கடமை பண்பு இயல்பாகவே என்னிடத்தில் உண்டு.
எப்போதும் நான் என்னை சிறப்பு செய்யக்கூடியவர்களுக்கு மதிப்பளிக்கக்கூடிய அணுகுமுறைகளை கையாண்டு வந்திருக்கிறேன்.
நானே பல கோவில்களில், கலசத்தில் தண்ணீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்திருக்கிறேன். என்னுடைய உறவினர்கள் அழைத்து, எனது இயக்கதினர் அழைத்து இதை நீங்கள் செய்யவேண்டும் என்று சொல்லுகிற போது, அதை மறுதலிப்பதிலேயே எனக்கு எந்த மகிழ்ச்சியும் ஏற்படப்போவதில்லை அல்லது எதையும் பெரிதாக நான் சாதித்துவிட போவதும் இல்லை.
அவர்கள் சொன்னதை நான் செய்தேன் என்பதில் அவர்களுக்கு மகிழ்ச்சி. அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்பதை பார்க்கும் போது எனக்கு மகிழ்ச்சி, அவ்வளவு தான். ஆனால் இன்று நம்மை குறிவைத்து நமக்கு எதிராக அவதூறு எழுப்புகிற அரசியலை நாம் இங்கு பார்க்கிறோம்.
தமிழகம் ஏதோ ஒரு திசைக்கு மடைமாற்றம் செய்யப்படுகிறது. இதுவரை கட்டிக் காப்பாற்றப்பட்ட சமூக நீதி அரசியல், இங்கே சிதைந்து போகுமோ என்கிற கவலை மேலிடுகிறது. வெறும் அரசியல் ஆதாயத்திற்காக அதிமுக போன்ற கட்சிகள் இன்றைக்கு இவர்களை தோள்களில் தூக்கி சுமக்கிறார்களே? இது எங்கே போய் முடியுமோ? தமிழகத்தின் அரசியல் என்ன கதிக்கு ஆளாகுமோ என்கிற கவலை தான் நமக்கு மேலிடுகிறது.
இவ்வாறு திருமாவளவன் வீடியோவில் கூறி உள்ளார்.










மேலும்
-
புகார் பெட்டி : குப்பையை சாலையில் கொட்டுவதால் தொற்று நோய் பரவும் அபாயம்
-
பணியில் சேர முடியாத சுகாதார அலுவலர்
-
காரியம் தவறானால் கண்களில் நீராகி... குறைகள் களைய மனுக்களை குவித்த மக்கள்
-
முத்தான முத்தல்லவோ! முதல் வகுப்பு மாணவர் சேர்க்கையில் மாநில மூன்றாமிடம்
-
கண்களின் வார்த்தைகள் புரியாதோ! காய்கிறது நிலம்; விவசாயிகள் கவலை
-
ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை