கமேனி பதவி விலகினால் நியாயமான விசாரணை; வெளிநாட்டில் வசிக்கும் ஈரான் பட்டத்து இளவரசர் உறுதி

4


நியூயார்க்: ஈரான் ஆட்சியாளர் கமேனி பதவி விலகினால், அவர் மீதான குற்றங்களுக்கு நியாயமான சட்ட விசாரணை நடத்தப்படுவது உறுதி செய்யப்படும் என்று, அந்நாட்டின் பட்டத்து இளவரசர் ரெஸா பகலவி கூறினார்.
ஈரான் நாட்டில் 1979ம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சி நடந்து அயதுல்லா கொமேனி ஆட்சியை கைப்பற்றினார். அதற்கு முன் ஆட்சி செய்து வந்த ஈரான் மன்னர் ஷா, வெளிநாட்டுக்கு தப்பிச்சென்று விட்டார். அவர் காலமான நிலையில், அவரது மகன் மற்றும் குடும்பத்தினர் வெளிநாடுகளில் வசிக்கின்றனர்.

தற்போது ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்படுத்துவது பற்றி இஸ்ரேல் பிரதமர் கூறி வருகிறார். இதனால் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி விடலாம் என்ற எண்ணம், ஷா மன்னரின் வாரிசுகளுக்கு ஏற்பட்டுள்ளது.


ஷா மன்னரின் மகனும், பட்டத்து இளவரசருமான ரெஸா பகலவி இன்று கூறியதாவது:ஈரான் அரசு கவிழ்ந்து கொண்டிருக்கிறது. அயதுல்லா அலி கமேனியும், அவரது கூட்டாளிகளும் வெளிநாட்டுக்கு தப்பியோட முயற்சி மேற்கொண்டுள்ளனர். நான் கமேனிக்கு நேரடியாக ஒரு செய்தியை சொல்கிறேன்.
பதவி விலகுங்கள். அப்படி விலகினால் உங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு நியாயமான சட்ட விசாரணை உறுதி செய்யப்படும்.


தற்போதைய ஆட்சியாளர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை மேற்கத்திய நாடுகள் வழங்கினால், மேலும் ரத்தக்களறியும், குழப்பமும் தான் ஏற்படும்.அவர்களால் எந்த நாடும் பாதுகாப்பாக இருக்க முடியாது. நான் அரசியல் அதிகாரத்தை எதிர்பார்க்கவில்லை. நமது நாட்டை இந்த இக்கட்டான நேரத்தில் இருந்து மீட்டு ஸ்திரத்தன்மை, சுதந்திரம், நீதியின் வழியில் கொண்டு செல்ல உங்களுக்கு உதவ விரும்புகிறேன்.
இவ்வாறு பகலவி தெரிவித்துள்ளார்.

Advertisement