கத்தாரில் அமெரிக்க படைத்தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

1


தோஹா: மேற்காசியாவில் நடக்கும் போரில் அடுத்த திருப்பமாக, கத்தார் தலைநகர் தோஹா மீது ஈரான் தாக்குதல் தொடுத்துள்ளது.


வளைகுடா நாடான கத்தார், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்திக்கு பெயர் பெற்றது. இந்த நாட்டில் அமெரிக்காவின் மிகப்பெரிய படைத்தளம் அமைந்துள்ளது. அட்லாண்டிக் ஒப்பந்த நாடுகள் தவிர்த்த பிற உலக நாடுகளில், அமெரிக்காவின் மிக முக்கிய கூட்டாளியாக கருதப்படுவது கத்தார் நாடு.


தற்போது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரானை தாக்கியுள்ள நிலையில், அதற்கு ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.

நேரடியாக அமெரிக்காவை தாக்க முடியாத ஈரான், அந்த நாட்டுக்கு ஆதரவாக இருக்கும் கத்தார் மீது தாக்குதல் தொடுத்துள்ளது. கத்தார் நாட்டில் அமைந்துள்ள அமெரிக்க படைத்தளத்தை குறிவைத்து ஈரான் ஏவுகணைகள் சற்று முன்னர் ஏவப்பட்டுள்ளன.
இந்த ஏவுகணைகளை அமெரிக்காவின் பேட்ரியாட் தடுப்பு ஏவுகணைகள் வழிமறித்து முறியடித்து வருகின்றன.


இதுவரை பெரிய பாதிப்பு எதுவும் இல்லை. எனினும் நாளுக்கு நாள் போர் சூழல் மோசமாகி வருவது, உலகம் முழுவதும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கத்தாரில் வசிக்கும் தங்கள் நாட்டவர் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும் படி அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
கத்தார் நாட்டில் இருக்கும் அமெரிக்கர்கள் அனைவரும் மறு உத்தரவு வரும் வரை பாதுகாப்பான இடங்களில் தங்கி இருக்க வேண்டும் என்றும் வெளியில் வரக்கூடாது என்றும் அமெரிக்கா அறிவுறுத்தி உள்ளது


வான்வெளி மூடல்





ஈரான் ஏவுகணை தாக்குதலையடுத்து கத்தார், பஹ்ரைன், எகிப்து, குவைத், ஈராக் மற்றும் சவுதி அரேபியா தங்களது வான்வெளியை மூடின. அண்டை நாடான பக்ரைனில் சைரன் ஒலி எழுப்பப்பட்டு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement