'ஹோல்ட் ஆன்' : விண்ணப்பிக்காத வழித்தடங்களில் மினி பஸ்ரூட் அனுமதி: பெரியார் பஸ் ஸ்டாண்டில் இருந்து இயக்குவதற்கும் எதிர்ப்பு

மதுரையில் இத்திட்டத்தில் பஸ்கள் செல்லாத 50க்கும் மேற்பட்ட வழித்தடங்கள் கண்டறியப்பட்டு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. பரிசீலனைக்கு பின் மதுரை வடக்கு ஆர்.டி.ஓ., அலுவலக பகுதியில் 13, தெற்கு, மத்திய அலுவலகங்களில் 13 என 26 தடங்களில் பஸ்கள் இயங்கத் துவங்கின.

புதிய வழித்தடங்களில் விண்ணப்பங்களே வராத பகுதிகளும் உள்ளன. மதுரை தெற்கு அலுவலகத்தில் 14 வழித்தடங்களிலும், வடக்கு அலுவலகத்தில் 5 வழித்தடங்களுக்கும் மினிபஸ் இயக்க யாரும் முன்வரவில்லை. மத்தியஅலுவலகம் பெரும்பாலும் நகர் பகுதியாக இருப்பதால் இதுபோன்ற நிலை இல்லை.

தெற்கு அலுவலக பகுதியில் உசிலம்பட்டி, பேரையூர், சேடப்பட்டி பகுதிகள், வடக்கு அலுவலகத்தில் வாடிப்பட்டி, மேலுார் ஒன்றியங்களில் சில தடங்களுக்கு யாரும் வரவில்லை. இத்தடங்களில் பஸ்களை இயக்கினால் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது எனக்கருதுவதே காரணம்.

புதிய பஸ் வாங்க வேண்டுமெனில் ரூ.30 லட்சம், பழைய வாகனம் என்றாலும் ரூ.15 லட்சத்திற்கு மேலாகும். இந்தளவு முதலீடு செய்தாலும் போதிய பயணிகள் வராத நிலையில் நஷ்டமடைய விரும்பாததும் மற்றொரு காரணம்.

போக்குவரத்துக் கழகமும் தயக்கம்



இத்தடங்களில் அரசு பஸ்களை இயக்க அரசு முயற்சிக்கிறது. ஏற்கனவே நலத்திட்டங்களால் நலிந்துஉள்ள போக்குவரத்துக் கழகம் மேலும் நலிவுறும் என்பதால் அதிகாரிகள் தயக்கம் காட்டுகின்றனர். இதனால் மீண்டும் அத்தடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டு புதிதாக விண்ணப்பம் பெற வாய்ப்புள்ளது.

இதுபோல ஏற்கனவே இயங்கும் மினிபஸ்களை 5 கி.மீ., கூடுதலாக இயக்கவும் அரசு வாய்ப்பளித்துள்ளது. இதன்படி மதுரையில் பலர் பெரியார் பஸ்ஸ்டாண்டில் இருந்து இயக்க முன்வந்துள்ளனர். அதற்கு அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இப்போதைக்கு இந்த நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தெற்கு ஆர்.டி.ஓ., அலுவலக பகுதியில் பெரியார் பஸ்ஸ்டாண்ட் அல்லாத பகுதியில் மட்டும் 6 தடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Advertisement