விஜய் கட்சியினர் வைத்த பேனர் சரிந்து விழுந்ததில் முதியவர் காயம்

வில்லிவாக்கம், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயின் பிறந்த நாள் விழாவை, மாநிலம் முழுதும் கட்சியினர் கொண்டாடினர். அந்தவகையில், வில்லிவாக்கம், தெற்கு மாடவீதியில், மத்திய சென்னை மாவட்ட கட்சி அலுவலகத்தின் திறப்பு விழா நடந்தது.

விழாவில், கட்சியின் பொதுச் செயலர் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவையொட்டி, வில்லிவாக்கத்தில் அனுமதியின்றி பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக, தெற்கு மாடவிதியில், 10*12 என்ற அளவில் 10க்கும் மேற்பட்ட பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, பலத்த காற்றுடன் பெய்த மழையின்போது, கட்சி அலுவலகம் அருகில் இருந்த பேனர் சரிந்து, அவ்வழியாக நடந்து சென்ற சூளையைச் சேர்ந்த காவலாளி மோகன், 73, என்பவர் மீது விழுந்தது.

இதில், தலை, தோள்பட்டையில் பலத்த காயமடைந்தவரை அங்கிருந்தோர் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அனுமதியின்றி பேனர் வைத்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில், வில்லிவாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement