ஒழுங்கீன மாணவர்கள் மீது கிடுக்கிப்பிடி நடவடிக்கை... தேவை; கலெக்டர் குழு அமைத்து முறைப்படுத்த கோரிக்கை
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கடந்த 2ம் தேதி திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் 1,295 அரசு பள்ளிகள், 282 தனியார் பள்ளிகள், 196 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், 23 பகுதிநேர நிதியுதவிபெறும் பள்ளிகள் என மொத்தம் 1,796 பள்ளிகள் செயல்படுகிறது.
இதில், 3 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் படிக்கின்றனர்.
இதே போன்று, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 871 அரசு பள்ளிகள், 197 தனியார் பள்ளிகள், 108 அரசு உதவி பெறும் பகுதி நேர மற்றும் முழு நேர பள்ளிகள் என மொத்தம் 1,176 பள்ளிகள் உள்ளன. 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
இவர்களுக்கு அரசு சார்பில் சீருடை, புத்தகம் உள்ளிட்டவைகள் வழங்கப்படுகிறது. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஒழுங்கீனமான முறையில் வகுப்பறைக்கு வருகின்றனர்.
மாணவர்கள் தங்களின் தலை முடியை வித்தியாசமாக வைத்துக் கொண்டும், சீருடையில் சட்டைகளை துாக்கலாக இடுப்பு அளவிற்கும், பேண்ட்டுகளை டிசைனாகவும் தைத்தும் அணிந்து வருகின்றனர்.
மேலும், வகுப்பறைக்கு மாணவர்கள் மொபைல் போன் எடுத்து வரும் நிகழ்வும் அதிகரித்துள்ளது. இவர்களை ஆசிரியர்கள் கண்டித்தால், அவர்களிடம் மரியாதை குறைவாக நடந்து கொள்கின்றனர். இதனால், ஆசிரியர்கள் மனம் நொந்து போகின்றனர்.
மாணவர்களின் இந்த செயலில் பெற்றோர்களின் பங்கும் உள்ளது. தங்கள் குழந்தைகளை சரியாக முடி திருத்தம் செய்யவும், சீருடைகள் சரியான அளவில் தைத்து அணிந்து செல்வதையும் பெற்றோர்கள் கவனிப்பதுடன் கண்டிக்கவும் வேண்டும். இதேபோன்று, மொபைல் போன்களை பள்ளிக்கு எடுத்துச்செல்ல பெற்றோர்கள் அனுமதிக்கக்கூடாது.
மாணவர்களின் இந்த அட்டகாசத்தாலும், பெற்றோர்களின் அலட்சியப் போக்காலும் அரசு பள்ளிகளின் கல்வித்தரம் கேள்விக்குறியாகும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது.இதைத் தடுக்க கலெக்டர் அதிரடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதாவது ஒரே நாளில் அரசு பள்ளிகளில் குழு அமைத்து சோதனை செய்ய வேண்டும்.
அப்போது, ஒழுங்கீன மாணவர்கள் மீது கிடுக்கிப்பிடி நடவடிக்கை எடுத்து, பெற்றோர்களை அழைத்து அறிவுரை வழங்க வேண்டும்.
மேலும், வகுப்பறைக்கு எடுத்து வரும் மொபைல் போன்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படி செய்தால், மாணவர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டு ஒழுக்கத்தை பின்பற்றுவார்கள்.
எனவே, மாவட்ட அரசு பள்ளிகளில், பள்ளிக்கல்வித்துறை மட்டுமின்றி பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து அதிரடி சோதனையில் ஈடுபட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
நீதிபதி தகுதிநீக்க தீர்மான நோட்டீசில் எம்.பி.,க்கள் கையெழுத்தில் முரண்பாடு
-
பயிர் கடனுக்கு ஜாமின்தாரர் உத்தரவாதம்; வேளாண் கூட்டுறவு வங்கிகள் நெருக்கடி
-
5 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் வெளியானது!: கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்டை வீழ்த்தியது காங்.,
-
விவசாயி மர்ம மரணம் : போலீசார் விசாரணை
-
அதிர்வலைகளை ஏற்படுத்திய பவன் கல்யாண்; காங்கிரஸ், இந்திய கம்யூ., கண்டனம்
-
தோல்வி பயத்தில் உளறும் தி.மு.க., நாகேந்திரன் கடும் தாக்கு