5 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள்

புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்ததில் இருந்தே மந்தமாக இருந்த ஆம் ஆத்மி, பஞ்சாபின் லுாதியானா மேற்கு, குஜராத்தின் விசாவதர் ஆகிய தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் அபார வெற்றி பெற்றுள்ளது. கேரளாவின் நிலம்பூர் தொகுதியில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை காங்., வீழ்த்திய நிலையில், மேற்கு வங்கத்தின் காளிகஞ்ச் தொகுதியை ஆளும் திரிணமுல் காங்., தக்க வைத்துள்ளது. ஐந்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்திய பா.ஜ., குஜராத்தில், ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
பஞ்சாபின் லுாதியானா மேற்கு; கேரளாவின் நிலம்பூர்; மேற்கு வங்கத்தின் காளிகஞ்ச்; குஜராத்தின் விசாவதர், காடி ஆகிய ஐந்து சட்டசபை தொகுதிகளில், கடந்த 19ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.
இதில் கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில், அடுத்த ஆண்டு ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதால், அதற்கு முன்னோட்டமாக இந்த இடைத்தேர்தல் பார்க்கப்பட்டது. இடைத்தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
நிலம்பூர்
நிலம்பூர் தொகுதியில், காங்., தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் ஆர்யாதன் சவுகத், ஆளும் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி கூட்டணி வேட்பாளர் எம்.ஸ்வராஜை, 11,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். இந்த தொகுதியில், சவுகத் தந்தை ஆர்யாதன் முகமது எட்டு முறை வெற்றி பெற்றுள்ளார்.
நிலம்பூர் இடைத்தேர்தல் பிரியங்கா பிரதிநிதித்துவப்படுத்தும் வயநாடு லோக்சபா தொகுதியின் ஒரு பகுதியாக இருப்பதால், அது ஒரு கவுரவப் போராகக் கருதப்பட்டது.
2026 சட்டசபை தேர்தலுக்கு முன், ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு இந்த வெற்றி ஒரு பலமாக அமைந்துள்ளது. இடதுசாரிகளின் கோட்டையான நிலம்பூரை காங்., கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
லுாதியானா மேற்கு
ஆளும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,வாக இருந்த குர்பிரீத் பாசி கோகி தற்கொலை செய்ததை அடுத்து, லுாதியானா மேற்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. இதில், ஆம் ஆத்மி வேட்பாளரான ராஜ்யசபா முன்னாள் எம்.பி.,யும், தொழிலதிபருமான சஞ்சீவ் அரோரா, 10,000 ஓட்டுகளுக்கும் மேல் வெற்றி பெற்றுள்ளார்.
காங்கிரசின் பாரத் பூஷண் ஆஷு இரண்டாமிடம் பிடித்த நிலையில், பா.ஜ.,வின் ஜீவன் குப்தா மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.
விசாவதர்
பா.ஜ., ஆளும் குஜராத்தின் விசாவதர் தொகுதி இடைத்தேர்தலில், ஆம் ஆத்மி வேட்பாளர் கோபால் இத்தாலியா, பா.ஜ., வேட்பாளர் கிரித் படேலை தோற்கடித்துள்ளார். 75,942 ஓட்டுகளை பெற்ற கோபால் இத்தாலியா, கிரித் படேலை, 17,000க்கும் மேற்பட்ட ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார்.
காடி
காடி எம்.எல்.ஏ.,வாக இருந்த பா.ஜ., நிர்வாகி கர்சன் சோங்கி மரணமடைந்ததை அடுத்து, இடைத்தேர்தல் நடந்தது. இதில் போட்டியிட்ட பா.ஜ., வேட்பாளர் ராஜேந்திர சாவ்டா, மும்முனை போட்டி நிலவிய நிலையிலும், 39,000க்கும் மேற்பட்ட ஓட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார்.
காளிகஞ்ச்
நாடியா மாவட்டத்தில் உள்ள காளிகஞ்ச் சட்டசபை தொகுதியில், ஆளும் திரிணமுல் காங்., - எம்.எல்.ஏ.,வாக இருந்த நசிருதீன் அகமது, கடந்த பிப்ரவரியில் உயிரிழந்ததை அடுத்து, இடைத்தேர்தல் நடந்தது. இதில், அவரது மகன் அலிபா அகமது, திரிணமுல் காங்., வேட்பாளராக களமிறங்கினார்.
அவர், 50,000க்கும் மேற்பட்ட ஓட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார். அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், காளிகஞ்ச் தேர்தல் வெற்றி ஆளும் திரிணமுல் காங்கிரசுக்கு நம்பிக்கை அளித்துள்ளது.
காளிகஞ்ச் தொகுதியில் ஆளும் திரிணமுல் காங்., வெற்றி பெற்றதை அடுத்து, அத்தொகுதிக்குட்பட்ட மொலாண்டி என்ற கிராமத்தில், திரிணமுல் காங்., - மார்க்சிஸ்ட் கம்யூ., தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட குண்டு வெடிப்பில், 13 வயது சிறுமி உயிரிழந்தார். இது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவத்துக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்தார். 'சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளதற்கு இதுவே சாட்சி' என பா.ஜ., கண்டனம் தெரிவித்துள்ளது.




மேலும்
-
எந்த வடிவம் என்றாலும் பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும்: சீனாவிடம் இந்தியா வலியுறுத்தல்
-
மின்சாரம் தாக்கி முதியவர் பலி
-
வட்டார கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
-
அமெரிக்கா செல்ல அனுமதி கோரி செந்தில் பாலாஜி தம்பி மனு
-
மழையில் நனைந்து சேதமான நெல் மூட்டைகள்; அதிகாரிகளிடம் விவசாயிகள் வாக்குவாதம்
-
நோயாளிகளின் நலன் போல டாக்டர்கள் பாதுகாப்பும் அவசியம்: மஹா., கவர்னர் ராதாகிருஷ்ணன் பேச்சு