நீதிபதி தகுதிநீக்க தீர்மான நோட்டீசில் எம்.பி.,க்கள் கையெழுத்தில் முரண்பாடு

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியை, தகுதிநீக்கம் செய்யக்கோரி எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அளித்துள்ள கோரிக்கை மனுவில் பலரது கையெழுத்து முரண்படுவதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து அவற்றை சரிபார்க்கும் பணியில் ராஜ்யசபா செயலகம் ஈடுபட்டுள்ளது.
உ.பி.,யின் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் சேகர் யாதவ். பொது சிவில் சட்டம் குறித்து, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் நடத்திய கூட்டத்தில், இவர் பங்கேற்று பேசுகையில், “பெரும்பான்மை சமூகத்தின் விருப்பத்தின் பேரில்தான், இந்த நாடு இயங்கும். இதை சொல்வதற்கு, எனக்கு எந்த தயக்கமும் இல்லை.
“ஐகோர்ட் நீதிபதியாக இருப்பதாலேயே, இப்படி நான் பேசக்கூடாது என்று, யாரும் சொல்ல முடியாது. சட்டமே, பெரும்பான்மை அடிப்படையில் தான் இயங்குகிறது,” என பேசியிருந்தார்.
இதை கண்டித்த ராஜ்யசபா எம்.பி.,யும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல், நீதிபதி சேகர் யாதவை தகுதிநீக்கம் செய்ய வலியுறுத்தி ராஜ்யசபா செயலகத்தில் நோட்டீஸ் அளித்தார். இதையடுத்து இந்த விவகாரம் பெரிதானது.
மொத்தம், 55 எம்.பி.,க்களின் கையெழுத்துகள் அடங்கிய அந்த கோரிக்கை, ராஜ்யசபா தலைவரும் துணை ஜனாதிபதியுமான ஜக்தீப் தன்கரின் பரிசீலனையில் உள்ளது. இந்நிலையில், ராஜ்யசபா செயலகத்துக்கு ஒரு புகார் வந்தது.
அதில், ஒரே எம்.பி., யின் கையெழுத்து, இருமுறை போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படவே, அதிகாரிகள் உஷாராகினர். இது முடிவதற்குள், தன் ஒப்புதல் இல்லாமலேயே கையெழுத்து போடப்பட்டுள்ளதாக மற்றொரு எம்.பி., தெரிவித்தார்.
தகுதிநீக்க தீர்மான நோட்டீசில் இரட்டை கையெழுத்தோ அல்லது பிழைகள் இருந்தாலோ, விதிகளின்படி அந்த நோட்டீஸ் நிராகரிக்கப்படும். எனவே, நோட்டீசை சரிபார்க்கும்படி ராஜ்யசபா செயலக அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து, எம்.பி.,க்களின் கையெழுத்துகள் அனைத்தையும் சரிபார்க்கும் பணி துவங்கியது. பெரும்பாலான கையெழுத்துகள் சரிபார்க்கப்பட்டுவிட்ட நிலையில், இன்னும் சிலரின் கையெழுத்துகள் சரிபார்க்கப்பட வேண்டியுள்ளது.
லோக்சபாவிலும் இதே தீர்மானம் கொண்டுவரும் நோக்கில், தேசிய மாநாட்டு கட்சி எம்.பி., ஒருவர், நுாற்றுக்கும் மேற்பட்ட எம்.பி.,க்களிடம் கையெழுத்து வாங்கியிருப்பதாக தகவல் வெளியானது. இதனால், இந்த கையெழுத்துகள் அனைத்தையும் ஆய்வு செய்ய லோக்சபா செயலகமும் முடிவெடுத்துள்ளது.
கையெழுத்துகளை ஆய்வுசெய்து சரிபார்க்கும் பணி முடிவடைந்து, நடைமுறை சிக்கல்கள் அனைத்தும் தீர்க்கப்படும் வரையில், இந்த தீர்மானம் அடுத்த கட்டத்தை எட்டப் போவதில்லை.
இதனால், வரும் மழைக்கால கூட்டத்தொடரில் நீதிபதி சேகர் யாதவை தகுதிநீக்கம் செய்ய எதிர்க்கட்சிகள் எடுத்து வரும் முயற்சி வெற்றி அடைவது சுலபம் அல்ல என, பார்லி., வட்டாரங்களில் கூறப்படுகிறது.
- நமது டில்லி நிருபர் -



மேலும்
-
160 பேருடன் சென்ற விமானம் குவைத்தில் தரையிறக்கம்; காரணம் இதுதான்!
-
பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.5 ஆக பதிவு
-
எந்த வடிவம் என்றாலும் பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும்: சீனாவிடம் இந்தியா வலியுறுத்தல்
-
மின்சாரம் தாக்கி முதியவர் பலி
-
வட்டார கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
-
அமெரிக்கா செல்ல அனுமதி கோரி செந்தில் பாலாஜி தம்பி மனு