தீயணைப்பு நிலையத்திற்கு ரூ.71 லட்சத்தில் புதிய வாகனம்

வானுார்: விழுப்புரம் மாவட்டத்தில், தீ விபத்துகள், மழை, புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படுபவர்களை மீட்பது மட்டுமின்றி, உயரமான இடங்களில் சிக்கிக் கொண்டவர்கள், சாலை விபத்தில் சிக்கியவர்களை மீட்பது என தீயணைப்பு துறை முக்கிய பங்காற்றி வருகிறது.
இதற்கு அதிநவீன வாகனங்கள் தீயணைப்பு துறைக்கு முக்கியமான ஒன்றாக உள்ளது. இதற்காக விழுப்புரம், திண்டிவனம் பகுதியில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு தமிழக அரசால் தலா 71 லட்சம் ரூபாய் செலவில் 2 புதிய நவீன வாகனம் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து திண்டிவனம் தீயணைப்பு நிலைய அலுவலர் மாரி கூறுகையில், 'விழுப்புரம், திண்டிவனத்திற்கு ஆபத்து காலங்களில் மீட்கும் வகையில் புதிய நவீன வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது.ஏற்கனவே இருக்கும் வாகனம், 4500 லிட்டர் கொள்ளளவு தண்ணீர் நிரப்ப முடியும். இதனால் பெரிய தீ விபத்துகள் ஏற்படும் இடங்களில் தண்ணீர் போதுமானதாக இருக்காது. இரண்டு, மூன்று முறை சென்று தண்ணீர் நிரப்பும் நிலை இருந்தது.
தற்போது,புதிதாக வழங்கப்பட்டுள்ள வாகனத்தில் வாட்டர் பவுசர் என்ற பிரத்தியேக கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதில் 12 ஆயிரம் லிட்டர் வரை தண்ணீர் நிரப்ப முடியும். மூன்று வாகனங்கள் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பணியை இந்த ஒரு வாகனத்தை வைத்தே செய்து முடிக்க முடியும்.
மேலும், இந்த வாகனத்தில் அவசர காலத்திற்கு பயன்படுத்தப்படும் கருவிகளும் கூடுதலாக இடம் பெற்றுள்ளது' என்றார்.