மயான பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல் குறைதீர் கூட்டத்தில் கிராமத்தினர் மனு

தேனி: மயானத்திற்கு செல்லும் ஓடை பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட வலியுறுத்தி மரிக்குண்டு கிராமத்தினர் மனு வழங்கினர்.

தேனி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமையில் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் டி.ஆர்.ஓ., மகாலட்சுமி முன்னிலை வகித்தார். மாவட்ட வழங்கல் அலுவலர் மாரிச்செல்வி, கலெக்டர் நேர்முக உதவியாளர் முத்துமாதவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொது மக்கள் வழங்கிய மனு விபரம்:

ஆண்டிபட்டி தாலுகா மரிக்குண்டு பொதுமக்கள் சார்பில் வேலுசாமி உள்ளிட்டோர் வழங்கிய மனுவில், 'ஓடைப்பாதையில் விளைபொருட்கள் கொண்டு செல்லவும், இறந்தவர்களை மயானத்திற்கு எடுத்து செல்லவும் பயன்படுத்தினோம். இந்த ஓடை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால், மயானத்திற்கு இறந்தவர்களை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. மயானத்திற்கு செல்லும் ஓடைப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்,'கோரினர்.

தேனி மாவட்ட அனைத்து கிறிஸ்தவர்கள் சங்கம் சார்பில் தலைவர் ஜேம்ஸ் வழங்கிய மனுவில், 'மாவட்டத்தில் தேனி தாலுகாவில் மட்டும் கிறிஸ்தவர்களுக்கான கல்லறை அமைக்க அரசு இடம் ஒதுக்கி உள்ளது. அதே போல் மற்ற தாலுகாக்களிலும் இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்,' என்றிருந்தது.

கணவர் மரணத்தில் மர்மம்



கூடலுார் கிருஷ்ணசாமி கவுடர் தெரு கீதா, இரு மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் வந்து வழங்கிய மனுவில், 'எனது கணவர் பாலமுருகன் கட்டட தொழிலாளி. தேனி உப்பார்பட்டியில் பணிமுடிந்து ஏப்.,7ல் வீடு திரும்பினார். அப்போது உத்தமபாளையம் அருகே அவருடைய டூவீலர் நடந்து சென்றவர் மீது மோதி விபத்து ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், விபத்தின் போது அவருடன் டூவீலரில் வந்த பாலசுப்பிரமணியன், நடந்து சென்ற ஹக்கீம் ஆகியோருக்கு பெரிய பாதிப்பு இல்லை.இந்நிலையில் மூளைச்சாவு ஏற்பட்டு எனது கணவர் மதுரை அரசு மருத்துவமனையில் இறந்தார். விபத்தின் போது டூவீலர் முன்பகுதி, கணவரின் ஹெல்மெட் சேதமடைந்திருந்தது. எனது கணவரின் இறப்பில் உண்மை தன்மையை ஆராய்ந்து, உதவிட வேண்டும்,' என கோரி இருந்தார்.

மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர்சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கூடலுார் நகராட்சியில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு அரசு நிர்ணயித்த ஊதியம் வழங்க வேண்டும்.

இ.பி.எப்., முறைகேட்டை கலைந்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். மா.கம்யூ., மாவட்ட செயலாளர் ராமசந்திரன், மாவட்ட தலைவர் ஜெயன், நிர்வாகி ஜெயப்பாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர்.

Advertisement