காட்சிப் பொருளான சமுதாய கூடம்

கச்சிராயபாளையம் : வடக்கனந்தல் பேரூராட்சியில் கட்டி முடிக்கப்பட்டு காட்சி பொருளாக உள்ள சமுதாய கூடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடக்கனந்தல் பேரூராட்சிக்குட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில் பழுதடைந்த சமுதாயக்கூடத்தை அகற்றி விட்டு அதே இடத்தில் மீண்டும் புதிதாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தாட்கோ திட்டத்தின் மூலம் 1.20 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டது.

இதில் தரை தளம் மற்றும் மேல் தளம் உட்பட இரண்டு தளங்களில் வரவேற்பறை, சமையலறை, டைனிங்ஹால், மினி ஹால், கழிவறை வசதியுடன் கூடிய மணமக்கள் அறைகள் அமைத்து பணிகள் நிறைவடைந்தது.

தொடர்ந்து, கட்டி முடிக்கப்பட்ட சமுதாயகூடத்தை கடந்த மார்ச் மாதம் முதல்வர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

திறக்கப்பட்டு 3 மாதங்களுக்கு மேல் ஆகியும் இது வரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை.

சமுதாயக் கூடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement