விவசாயிகளுக்கான அடையாள எண் விரைவாக பதிவு செய்ய அறிவுறுத்தல்

கள்ளக்குறிச்சி : விவசாயிகளுக்கான தனித்துவமான அடையாள எண்ணுக்கு வரும் 30ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

கலெக்டர் பிரசாந்த் செய்திகுறிப்பு:

விவசாயிகள் அரசின் பல்வேறு திட்ட பலன்களைப் பெற நில உடைமை விபரங்கள், பயிர் சாகுபடி அறிக்கை போன்ற சம்மந்தப்பட்ட ஆவணங்களை ஒவ்வொரு முறையும் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது.

இதில் காலதாமதம் ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு அனைத்து விவரங்களும் மின்னணு முறையில் சேகரிக்கப்படுகின்றன.

தற்போது விவசாயிகளின் பதிவு விவரங்களுடன், ஆதார் எண், மொபைல் எண், நில உடைமை விபரங்கள் இணைக்கும் பணி அனைத்து கிராமங்களிலும் நடைபெறுகிறது.

இதில் ஆதார் எண் போன்று விவசாயிகளுக்கு தனித்துவமான அடையாள எண் வழங்கப்படுகிறது.

வரும் காலங்களில் பிரதம மந்திரி நிதி திட்டம், பயிர் காப்பீட்டு திட்டம் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு திட்டங்களில் பயன்பெற தனித்துவ அடையாள எண் அவசியமாகும்.

மாவட்டத்தில் கடந்த 21ம் தேதி வரை 6 லட்சத்து 61 ஆயிரத்து 767 பட்டாதாரர்களில் ஒரு லட்சத்து ஆயிரத்து 663 பட்டாதாரர்கள் மட்டுமேபதிவு செய்துள்ளனர்.

எனவே, மீதமுள்ள 5 லட்சத்து 60 ஆயிரத்து 104 பட்டாதாரர்கள் வரும் 30ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

கிராமங்களில் வேளாண்மை உழவர் நலத்துறை அலுவலர்களால் நடத்தப்படும் சிறப்பு முகாம்கள் அல்லது பொது சேவை மையங்களில் சென்று கட்டணமின்றி பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement