மதுரை கலெக்டராக பிரவீன்குமார் நியமனம் மாநகராட்சி கமிஷனராக இருந்தவர்

மதுரை: மதுரை கலெக்டர் சங்கீதா சமூகநலத்துறை இயக்குனராக மாற்றப்பட்டார். அவருக்கு பதில் சென்னை மாநகராட்சி மண்டல துணை கமிஷனர் பிரவீன்குமார் பொறுப்பேற்க உள்ளார்.

கலெக்டராக 2023 மே மாதம் பொறுப்பேற்ற சங்கீதா, பணியில் கண்டிப்பு காட்டி அதிகாரிகளிடம் சிறப்பாக வேலைவாங்கினார். வலையங்குளத்தில் கள ஆய்வின்போது போலி டாக்டரை பிடித்துக்கொடுத்தார்.

பள்ளி, அங்கன்வாடி, சத்துணவு என பல துறைகளிலும் ஆய்வுமேற்கொள்ளும்போது அதனை சரிசெய்த விவரங்களையும் கேட்டுப் பெற்று பணியில் அக்கறை காட்டினார்.

கடந்த லோக்சபா தேர்தலில் ஓட்டு எண்ணிக்கையை விரைந்து முடித்து மாநில அளவில் முதல் தொகுதியாக முடிவுகளை அறிவித்தார். கோரிப்பாளையம் பகுதியில் மேம்பால பணிகளால் சித்திரைத் திருவிழாவில் அழகர் ஆற்றில் இறங்கும் நேரம், கூடும் கூட்டத்தை சமாளிக்க முடியுமா என்ற நிலையில் எவ்வித சலசலப்பும் இன்றி பிற துறைகளின் ஒத்துழைப்பால் நடத்தி முடித்தார்.

அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன் ஆகியோரின் உத்தரவுகள், சிபாரிசுகள் தனது பணியை எவ்விதத்திலும் பாதிக்காதவாறு சமாளித்தது இவரது திறமைக்கு சான்று.

புதிய கலெக்டர்



பிரவீன்குமார் கர்நாடகாவைச் சேர்ந்தவர். 2017 பேட்ச் ஐ.ஏ.எஸ்., அதிகாரி. ராமநாதபுரம் ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் கலெக்டராக இருந்தவர். 2023ல் மதுரை மாநகராட்சி கமிஷனராக பணியாற்றினார். 2 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மதுரைக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

கூடுதல் கலெக்டரும் மாற்றம்



மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையில் கூடுதல் கலெக்டர் மோனிகாராணா, திருநெல்வேலி மாநகராட்சி கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இவர், 2023 ஆகஸ்டில் பொறுப்பேற்றார். இவரது பணியிடத்தில் இதுவரை வேறு யாரும் அறிவிக்கப்படவில்லை.

Advertisement