ஆத்துார் வங்கியில் ரூ.1.25 கோடி போலி நகைகள் அடகு வைப்பு போலீசில் அடுத்தடுத்து தொடரும் புகார்

ஆத்துார்: திண்டுக்கல் மாவட்டம் ஆத்துார் கனரா வங்கியில் ரூ.1.25 கோடி போலி நகைகள் அடகு வைத்தது தொடர்பாக போலீசில் அடுத்தடுத்து புகார் செய்யப்பட்டு உள்ளது.

ஆத்துாரில் உள்ள தேசிய வங்கி ஒன்றில் சுற்று கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் நகை, சொத்து அடமான கடன்கள் பெற்றுள்ளனர். ஜன. 13ல் அழகர்நாயக்கன்பட்டியை சேர்ந்த சோனாஸ்ரீ 76 கிராம் தங்க நகை அடகு வைத்து கடன் பெற்றிருந்தார். அவரது நகை கவரிங் நகையாக உள்ளது என வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சியடைந்த சோனா ஸ்ரீ நகையை வாங்கியதற்கான ரசீது உள்ளிட்ட ஆவணங்களுடன் செம்பட்டி போலீசில் புகார் செய்தார்.

இந்நிலையில் வங்கி உதவி பொது மேலாளர் வின்ஜமூரி திண்டுக்கல் எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த புகாரில், குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் சம்பந்தப்பட்ட வங்கியில் அடகு வைக்கப்பட்ட நகை களில் ஒரு கோடி 25 லட்சம் ரூபாய் அளவிற்கு மோசடி நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டி.எஸ்.பி., குமரேசன் தலைமையிலான போலீசார் நகை மதிப்பீட்டாளர் அங்கணன், ஊழியர்கள் தங்கராஜ், கருப்பையா, பாண்டிகுமார் உட்பட 6 பேரிடம் விசாரித்து வருகின்றனர்.

Advertisement