போலி ஆதார், ரேஷன் கார்டு மூலம்  நிதி நிறுவனத்தில் கடன் பெற்று மோசடி   விசாரணைக்கு கலெக்டர் உத்தரவு  

சிவகங்கை: சிவகங்கையில் போலி ஆதார், ரேஷன் கார்டு தயாரித்து நிதி நிறுவனங்களில் கடன் பெற்று மோசடியில் ஈடுபடுவதாக பாதிக்கப்பட்ட பெண் கலெக்டர் ஆஷா அஜித்திடம் புகார் அளித்தார்.

சிவகங்கை மாவட்டம், காஞ்சிரங்காலை சேர்ந்தவர் ஜோதி. இவரது மகன் நரேஷ்குமார் 23. ஒன்றரை ஆண்டாக சவுதியில் வேலை பார்த்து வருகிறார். தனியார் பைனான்ஸ் கம்பெனியில் கடன் பெற தனது ஆதார் கார்டுடன், நாமினியாக தன் மகன் நரேஷ்குமார் பெயரை ஜோதி கொடுத்துள்ளார். அங்கு ஜோதிக்கு அதிர்ச்சியான சம்பவம் நிகழ்ந்தது தெரிய வந்தது.

சவுதியில் வேலை பார்க்கும் நரேஷ்குமார் பெயரில் போலி ஆதார் கார்டு தயாரித்துள்ளனர். திருமணம் ஆகாத அவருக்கும், மற்றொரு பெண்ணுக்கும் திருமணம் நடந்தது போல், போலி ஆவணங்களை தயாரித்து ரேஷன் கார்டும் பெற்றுள்ளனர். போலியாக தயாரித்த ஆதார், ரேஷன் கார்டுகளை வைத்து அந்த பெண் பெயரில் சிவகங்கையில் உள்ள பைனான்ஸ் நிறுவனங்களில் கடன் பெற்றுள்ளனர். அதில் நாமினியாக நரேஷ்குமார் பெயர் இருந்ததால் ஜோதிக்கு கடன்வழங்கமறுத்துள்ளனர். இதை அறிந்த ஜோதி நேற்று சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித்திடம் புகார் அளித்தார். சிவகங்கையில் பல தனியார் பைனான்ஸ் கம்பெனிகளில் இதுபோன்று போலி ஆதார், ரேஷன் கார்டுகளை ஆதாரமாக காண்பித்து பல லட்ச ரூபாய் வரை கடன் பெற்று, ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருவதாக கூறியுள்ளார்.

Advertisement