கொசு வளர்க்கும் மேலுார் நகராட்சி

மேலுார்:மேலுார் நகராட்சி முத்தமிழ் நகரில் கால்வாய் நிரம்பி கழிவுநீர் ரோட்டில் ஓடுவதால் மக்களின் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

இந்நகரின் முதல் தெருவில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் ஓரிடத்தில் தேங்கி கிடக்கிறது. கால்வாய் நிரம்பி ரோட்டில் ஆறாக ஓடும் கழிவுநீரில் கனரக வாகனங்கள் செல்லும் போது மாணவர்கள், அலுவலக பணிகள் மற்றும் டூவீலரில் செல்பவர்கள் மீது கழிவு நீர் தெறிக்கிறது. நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும் கால்வாயில் வரும் கழிவு நீரை ரோட்டின் மறுபுறத்தில் உள்ள கால்வாயில் இணைக்கவில்லை.

மக்கள் கூறியதாவது: கழிவுநீர் வெளியேறாமல் நிரந்தரமாக தேங்கி கிடப்பதால் கொசு உற்பத்தியாகி பலவிதமான தொற்று நோய்களுக்கு ஆளாகி வருகிறோம். துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேடாக காணப்படுகிறது. கழிவு நீரை சுத்தம் செய்யும் துப்புரவு, கொசு ஒழிப்பு பணியை சரிபார்க்க மஸ்துார் பணியாளர்கள் இருந்தும் கொசு உற்பத்தியாவது அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. அதனால் நகராட்சி நிர்வாகத்தினர் மக்களின் நலன் கருதி முத்தமிழ் நகரில் சுகாதார பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றனர்.

Advertisement