அமெரிக்கா செல்ல அனுமதி கோரி செந்தில் பாலாஜி தம்பி மனு

1

சென்னை : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார், மருத்துவ சிகிச்சைக்கு வெளிநாடு செல்ல அனுமதி கோரி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவுக்கு, அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் உட்பட, 13 பேருக்கு எதிராக, அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன் நடந்து வருகிறது.

இந்த வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் உள்ளிட்டோர் ஆஜராகினர்.

இதையடுத்து அசோக்குமார் தரப்பில், இதய அறுவை சிகிச்சை செய்து கொள்ள அமெரிக்கா செல்ல அனுமதி கோரி, மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவுக்கு, 30ம் தேதிக்குள் அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 8ம் தேதிக்கு, நீதிபதி தள்ளிவைத்தார்.

Advertisement