பெயரை மாற்றச்சொன்ன சென்சார் போர்டு: அமைச்சர் சுரேஷ் கோபி படத்துக்கு சிக்கல்

திருவனந்தபுரம்: பா.ஜ.,வை சேர்ந்த மத்திய இணையமைச்சர் சுரேஷ்கோபி நடித்துள்ள, ஜானகி வெர்சஸ் ஸ்டேட் ஆப் கேரளா படத்தின் பெயரை மாற்றச்சொல்லி சென்சார் வாரியம் நிர்பந்தித்ததை அடுத்து, அப்படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
பிரபல மலையாள நடிகரும், மத்திய இணையமைச்சருமான சுரேஷ்கோபி நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜானகி வெர்சஸ் ஸ்டேட் ஆப் கேரளா.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளம்பெண் அதை சட்டப் போராட்டத்துடன் எதிர்கொள்ளும் சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்த படத்தில் கதாநாயகியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். பிரவீன் நாராயணன் இயக்கியுள்ள இந்த மலையாளப் படம் வரும் 27ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
திருவனந்தபுரத்தில் செயல்படும் மத்திய அரசின் 'சென்சார் போர்டு' எனப்படும் திரைப்பட தணிக்கை சான்றிதழ் வாரியம், படத்துக்கு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியிருந்தது.
இதற்கிடையே படத்தின் தலைப்பில் சீதா தேவியின் பெயரான ஜானகி இடம்பெற்றிருப்பதால், மறுதணிக்கைக்கு மும்பையில் உள்ள சென்சார் வாரியத்துக்கு இப்படம் அனுப்பி வைக்கப்பட்டது.
அவர்கள், படத்தின் தலைப்பை மாற்றுமாறு இயக்குநர் பிரவீன் நாராயணனை வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து படத்தின் இயக்குநர் பிரவீன் கூறியதாவது:
சென்சார் வாரியத்தின் திருவனந்தபுரம் கிளை படத்துக்கு அனுமதியளித்தது. தலைப்பில் ஜானகி என இருப்பதால், அது தொடர்பான ஆலோசனைக்காக மும்பைக்கு தணிக்கைக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். சீதாதேவின் பெயர் இருப்பதால், தலைப்பை மாற்றும்படி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
அவ்வாறு மாற்றினால், படத்தின் சில காட்சிகள் மற்றும் வசனங்களையும் மாற்ற வேண்டி வரும். என்ன செய்வதென்று தெரியவில்லை. அதிகாரிகளின் கெடுபிடியால், படத்தை திட்டமிட்டபடி வரும் 27ம் தேதி வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
திரைப்பட தணிக்கை சான்றிதழ் வாரியத்தின் செயலுக்கு கேரள திரைப்பட ஊழியர் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலை தொடர்ந்தால், சென்சார் போர்டுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவோம் என அதன் உறுப்பினர்கள் எச்சரித்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து மத்திய இணைஅமைச்சர் சுரேஷ்கோபி எந்த கருத்தும் இதுவரை தெரிவிக்கவில்லை.
மேலும்
-
160 பேருடன் சென்ற விமானம் குவைத்தில் தரையிறக்கம்; காரணம் இதுதான்!
-
பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.5 ஆக பதிவு
-
எந்த வடிவம் என்றாலும் பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும்: சீனாவிடம் இந்தியா வலியுறுத்தல்
-
மின்சாரம் தாக்கி முதியவர் பலி
-
வட்டார கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
-
அமெரிக்கா செல்ல அனுமதி கோரி செந்தில் பாலாஜி தம்பி மனு